KILIYANUR ONLINE

Wednesday 3 April 2013

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

“திரு’ – வாசகம்!

1

ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய்
நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2

பேசுகிறாய்…
“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று
பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3

ஒன்றுக்கும்
குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!
பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4

வெறித்துப் பார்ப்பதில்
வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5

எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

( Word deleted )

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,
பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட
பயப்படுகிறாள் பெண்.
என்ன இருந்தாலும்
நீ ஆம்பளதான்டா!

6

விளக்குமாறு தொட்டு
வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை
நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும்
காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா,
என் ஜட்டியை
நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7

காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.
அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!


“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8

போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?
குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!
மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!
பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10

இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11

பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்


குத்துப் பாடல்கள்…
சின்னத் திரைகளில்


எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…
இலவச லேப்-டாப்பில்


விரியும் பாலியல் வலைகள்…
என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்


முதலாளித்துவ வியாபாரிகள்!
இத்தனைக்கும் காவலிருக்கும்


இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12

இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ

பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்

(Word Deleted ) ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!
புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்


மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

- துரை. சண்முகம்

No comments:

Followers