KILIYANUR ONLINE

Saturday 24 April 2010

இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் (IFS)



இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் தங்கம் செய்யாதததை சங்கம் செய்யும் என்பார்கள்.சங்கம் செய்யாததை எதுவும் செய்யமுடியாது.அமைப்பு சமுதாய முன்னேற்றத்திற்கு முன்னோடி.ஒன்றுப்படுத்துவது ஒன்று தான் சங்கத்தின் பிரதான நோக்கம்.

1946ஆம் ஆண்டு இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டதே தவிர சங்கத்தின் வரலாறு நூற்றாண்டு கால தொடர் வரலாறாகும்.

பல்லாண்டுகள் சிறப்பாக செயல்பட்டக் காரணத்தால் தான் கிளியனூரின் மையத்தில் நெஞ்சத்தாமரை போன்ற இடத்தில் அழகான ஒரு வசந்த மாளிகை ஒன்று வானுயர எழுந்துள்ளது.

என்னுடைய அனுபவ அறிவுக்கு எட்டிய வரையில் இப்படியொரு மணிமண்டபம் ஒரு சங்கத்திற்காக எந்த ஊரிலும் கட்டப்பட்டது இல்லவே இல்லை அதுவும் அறுபத்தி ரெண்டு வருடங்களுக்கு முன் என்னால் நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.

ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து 1996 ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடி மகிழ்ந்தோம் இன்று மணிவிழாவைத்தாண்டி வைரவிழாவை நோக்கி பணயிக்கிறோம்.

அறிவாரந்த பெருமக்கள் பலர் அன்று ஒன்று கூடி ஊரை உயர்த்திய இனிய வரலாறு இன்று நன்றியறிதலோடு நினைவு கூறப்படுகிறது.

பல பொதுநல விரும்பிகள் அறிஞர்கள் கவிஞர்கள் இசைவானர்கள் என பலரும் உருவாகிடக் காரணமான இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் இனிய வரலாற்றை இனி காண்போம்.

1955ஆம் ஆண்டுகளில் இந்திய கிராமங்களில் தன்னிறைவும் பெற்ற ஊர்களை தேர்ந்தெடுத்து மாதிரி கிராமம் என்ற பாரத பிரதமர் நேருஜி அவர்களின் தஞ்சை மாவட்டத்தில் அப்படி தேர்வு பெற்ற ஊர்தான் கிளியனூர்.

கிளியனூரின் மண்ணின் மைந்தர்கள் தங்கள் ஊரின் மீதும் தங்களுர் ஜமாஅத்தினர் மீதும் கொண்டிருந்த பேரன்பின் வெளிப்பாடாக இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் மூலம் ஒன்றுபட்டு சேவை செய்து வந்தனர்.

குறிப்பாக அன்றையக் காலக்கட்டங்களில் திருமணம் இரண்டு நாட்கள் நடைபெறும் இரவு முழுவதும் மாப்பிள்ளை ஊர்வலம் விடியற்காலை நிக்காஹ் தெருவெல்லாம் இறைமாலை திருநபி புகழ் பாடி இளைஞர்கள் சுற்றி வருவார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் உள்ள உறவினர்கள் தேனீர் காபி குளிர்பானங்கள் என்று சங்கத்து பிள்ளைகளுக்கு வழங்கி மகிழ்வார்கள்.பாடும் கலீபாக்களுக்கு பனகற்கண்டு பால் வழங்குவார்கள்.

சில ஊர்களில் தப்ஸ் அடித்து பாடுவது உண்டு கிளியனூர் சங்கத்தினருக்கு அன்று தொட்டே தப்ஸில் ஆர்வம் இல்லை.இயல்பாகவே நல்ல குரல்வளம் உள்ள பாடகர்களும் இயற்கையான நல்ல கவிஞர்களும் பொதுவாகவே நல்லசேவை மனப்பான்மையுள்ள இளைஞர்களும் நிரம்பியிருந்த அன்றைய சங்கத்துப் பிள்ளைகள் மனதை ஈர்க்கும் மதனமான இஸ்லாமிய பாடல்களை பாடி வீதி தோறும் ஊர்வலம் வருவதும் திருமண விருந்தின் போது சாப்பாடு தட்டுகளை அழகாகப் பரிமாறுவதும் காணக் கண்கோடி வேண்டும்.அன்றையக் காலத்தில் சகான் சாப்பாடு ஒரு சகானுக்கு மூன்று பேர் அமர்ந்து சாப்பிடுவர் அந்த சகான்கள் ஒருவர் பின் ஒருவராக கைமாற்றிஅ னுப்புகிற அழகைக்கண்டு இரசிக்காத தலைவர்கள் ஒருவர் கூட இல்லை.

பெரும்பாலான வீடுகளுக்கு வெற்றிலைக் கொடிக்கால் பயிர் சொந்தமாயிருக்கும்.கிடைக்கும் வெற்றிலைக்கு பாக்கு வேண்டுமே ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் சேவை செய்த சங்கத்துப் பிள்ளைகளுக்கு மறுநாள் கால்கிலோ தெக்கம்பாக்கு வழங்கப்படுவது வழக்கமாயிருந்தது.

மற்ற ஊர்களுக்கு முன்மாதிரியாக சங்கத்துப் பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான பின்னல் தொப்பியை அணிவித்தது நம்ம ஊர் சங்கம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு செயலாகும்.

அதன் பிறகு தான் மற்ற ஊர்காரர்களும் அதை பின் பற்றினார்கள்.அதுமட்டுல்ல தெருபைத்தும் மணவிழா சோபனமும் அக்கம் பக்கத்து ஊர்காரர்களும் கவிஞர் சலாம் அண்ணனும் நானும் எழுதிக் கொடுப்பதுண்டு.

சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ரமலானிலும் மார்க்க அறிவுப் போட்டிகளையும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியையும் நடத்துவதோடு ஒவ்வொரு பெருநாளைக்கும் இளைஞர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தி கல்லூரி அளவிலான போட்டிகளுக்கு இணையாக கேள்விபதில் நிகழ்ச்சிகள் நடத்தி வருவதும் முதல்நாள் இளைஞர்களுக்கான கபடி போட்டியை நள்ளிரவு வரை நடத்துவதும் இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் சிறப்புக்குரிய நிகழ்வுகளாகும் இதில் ஆவுரார் இனாயத்துல்லாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

சென்றது ஏர்காடு சங்கத்து ஏற்பாடு என்று ஒரு கவிதை பிறக்கக் காரணமான சுற்றுலா அவ்வப்போது அந்த காலத்திலிருந்து சங்கத்துப்பிள்ளைகள் தென்னந்திய முழுவதும் சுற்றி வந்திருப்பது அறிவார்ந்த நிகழ்வுகளாகும்.

அதைவிட ஒவ்வொரு கிளியனூர் இளைஞர்களும் தனது வீட்டுக்கு அடுத்தப்படியாக மிகவும் நேசிக்கும் இடமாக இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தையும் மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் நூலகத்தையும் ஜின்னா பூப்பந்தாட்டக் கழகத்தையும் தான் சொல்ல முடியும். துமிழக பிரபல தினசரி வார மாத இதழ்கள் மட்டுமின்றி இஸ்லாமிய இதழ்களும் ஒருசேர அணிவகுத்து நிற்கும் படிப்பகத்தை கிளியனூரைத்தவிர வேறு எந்த ஊரிலும் காணஇயலாது.

அறிவியல்தாக்கம் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி ஆராய்ச்சி மாணவர்களுக்கும் கூட பயன்படத்தக்க விலைமதிக்க முடியாத அரிய நூல்களின் அணிவகுப்பு நமது நூலகத்தின் தனிச்சிறப்பு.


1946-ஆண்டு இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்த சாந்துவீட்டு அல்ஹாஜ் அபுபக்கர் அவர்களின் முழுமையான முயற்சியின் பயனாக ஊர்ஜமாஅத்தார்கள் பொருளாதார உதவியுடன் வசூல் செய்து ஊர்மக்களின் கொடைதிறத்துடன் ஹாஜியார் ஓ.முஹம்மது ஷரீப் அவர்களின் செயல் திறத்துடன் உருவான எழில் மாளிகை சங்கக் கட்டிடம் இன்றைய இஸ்லாமிய முன்னேற்ற சங்கக் கட்டிடம்.

ஹாஜியார் அவர்கள் சைக்கோனில் (வியட்நாம்)கூத்தாநல்லூர் ஜா.மு.கம்பெனி தலைமை நிர்வாகியாக இருந்துள்ளதால் கூத்தாநல்லூர் ஜா.மு.கிளியனூர் சின்னப்பள்ளிவாசல் கட்டுவதற்கும் பெருமளவில் உதவியிருக்கிறார். ஆதைப்போன்றே சங்கத்தின் சுற்று சுவர் பூவேலைப்பாடு கொண்ட கலாரிகளை திருவாரூர் - மங்கைநல்லூர் வழிதடத்தில் இரயிலில் அனுப்பி வைத்தார்.ஹாஜியாரின் இளவல் காக்கா வீட்டு ஒ.அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் நமதூர் இளைஞர்கள் கலாரிகளை மங்கநல்லூரிலிருந்து தங்கள் திடத்தோள்களில் சுமந்து தூக்கி வந்து கட்டி முடித்திருக்கிறார்கள்.

முன்பக்கத்தைப் போலவே பின்பக்கமும் பால்கனி அமைக்க திட்டமிட்டிருந்தும் இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டதால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக பால்கனியின்றி பின்பக்கத்தை முற்றாக மூடிவிட்டார்கள்.

குட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு பிறகு 1957 அறிவு ஜீவியாகளாக இருந்த நமதூர் கவிஞர்கள் வஹாப் அண்ணனும் கவிஞர் அப்துல் சலாம் அண்ணனும் அதில் மவுலானா முஹம்மது அலி ஜௌஹர் பெயரால் நூலகத்தையும் படிப்பகத்தையும் ஆரம்பித்தார்கள். மகா கவி பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுதேச மித்திரன் கே.டி.எம்.அஹமது இபுராஹிம்(காயிதே மில்லத் இளவல்)அவர்களின் முஸ்லீம் நாளிதழும் வந்துக்கொண்டிருந்தன.அதன் பிறகு அலீம்கோ முஹம்மது இபுராஹீம் (கவிஞர் சலாம் அவர்களின் மச்சான்)தலைவராக சிறப்பாக சேவை செய்தார்.1957க்குப் பிறகு பட்டாமணியார் அப்துல்ரெஜாக் அவர்கள் நீண்டக்காலம் தலைவராயிருந்தார்.அதன் பிறகு கீழத்தெரு காமில் தகப்பனார் இ.அப்துல்ஹாதி சின்னப்பள்ளிவாசல் தெரு எம்.சர்புதீன் கே.எஸ்.வஜ்குதீன்(இப்போது திருவாளப்புத்தூர் வாசியாகி விட்டார்)நடுத்தெரு எம்.ஜெக்கரியா ஆகியோர் தலைமை தாங்கி நடத்திவந்தனர்.


1970க்குப் பிறகு சீனாஅனாவின் கடைசி வாரிசு எஸ்.ஏ.ஹாஜாநஜ்முதின் (நஜ்மா)அவர்கள் தலைமையில் தான் சங்கத்தின் வளர்ச்சி மலந்தது.நூலகம் புத்துயிர் பெற்றது.அதைத் தொடர்ந்து மறைந்த ஆசிரியர் ஏ.முஹம்மது இஸ்ஹாக் எம்.ஏ.பி.இடி அவர்களின் தலைமையில் சங்கத்தின் மறுமலர்ச்சி காலம் என்று சொல்லலாம்.

அதுவரை தன்னால் நடத்திவரப்பட்ட காந்திஜி ந}லகத்தின் நூல்களை சங்கத்து நூல் நிலையத்திற்கு வழங்கினார்.கவிஞர் அஜீஸ் அவர்கள் தடைசெய்யப்பட்டு பிறகு வெளியான மவுலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்கள் எழுதிய இந்திய சுதந்திர வெற்றி அல்லாமா இக்பாலின் கவிதைகள் கவுதுல் ஆஃலம் என்ற மெய்ஞ்ஞானம் நூல் இன்னும் பலகவிதைத் தொகுப்புகளை வழங்கினார்.ஒ.ஏ.அப்துல்அலீம் ஏ.அன்வர் பி.எஸ்.சி சின்னப்பள்ளிவாசல் தெரு ஏ.அப்துல்பத்தாஹ் பட்டாமணியார் வீட்டு அஸ்ரப்அலி பணத்தோட்டம் மெய்தீன் அப்துல்காதர் கிழக்குத்தெரு ஹாஜா நஜ்முதீன் பி.பி.எம்.ஜெகபர்அலி எஸ்.ஏ.நஜிமுதீன் கவிஞர் அஜீஸ் ஆகியோர் இணைந்து நூலகத்தையும் படிப்பகத்தையும் முற்றிலும் நவீனமாக மாற்றி அமைத்தார்கள்.

நூலகத்திற்கு கண்ணாடி பீரோ வழங்கியவர் அலீம் கோ இபுராஹிம் அவர்கள் இரும்பு நாற்காலிகள் வாங்கிப்போட்டவர் மாஸ்டர் வீட்டு ஏ.ஒய்.ஏ.அஜீஸ் அவர்கள்.பிறகு மரத்தாலான நாற்காலிகளையும் மேஜையையும் செய்து அலங்கரித்தவர் கீழத்தெரு ஹாஜா பி.எஸ்சி அவர்கள் நூல்களின் பட்டியலை தயாரித்து வரிசைப்படுத்தியவர் முஹம்மது நூஹ_ எம்.ஏ.பிஇடி அவர்கள் மற்றும் ஏ.சிக்கந்தர் எம்.காம் அவர்கள் புலவர் ஆபிதீன் நாகூர் ஹனிபா போன்ற பிரபலங்கள் எல்லாம் சங்கத்தின் மூலம் உருவானர்கள்தான்.

ஆந்த வரிசையில் கிளியனூர் புதுத்தெரு மூன்றாம் நம்பர் கரீம் சக்கரை கரீம் ஆகியோர் எடக்குடியார் வீட்டு வஹாப் அப்துல்சலாம் வரிசையில் 1966 முதல் இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் ஆஸ்தான கவிஞராக இருந்து இன்று தமிழகத்தில் சிறந்த கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் கிளியனூர் அஜீஸ் அவரைத் தொடர்ந்து அ.மு.இப்ராஹிம் கவிஞர் சஹிதா செல்வன் (அப்துல் அலீம்) போன்றவர்களை குறிப்பிடலாம்.

மெத்தக்கடை யூசுப் புதுப்பணக்கார வீட்டு ஜெகபர் தொங்கார் ஷம்சுதீன் சோக்கு வீட்டு ரசீது கருத்தாம் வீட்டு ஹலீல்ரஹ்மான் மோர்சார் வீட்டு ரஹீம் ஷரீப் போன்றவர்கள் சங்கத்தின் சங்கநாதப்பாவானர்கள்.

இப்படி திறம்பெற்ற தீனோர்களால் கூட்டிக் காக்கப்பட்ட இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி அன்று 1974-ஆம் ஆண்டு கோட்டக்குப்பத்தில் நடைப்பெற்ற முஸ்லிம் மாணவர் மன்றம் எம்.எஸ்.ஏ. மாநில மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துக் கொண்ட கவிஞர் அஜீஸ் அவர்களுக்கு பொன்னாடைப்போர்த்தப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.நமதூருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கவுரமாகும்.அருமை நண்பர் கொடை வள்ளல் அல்ஹாஜ் ஏ.அன்வர் பிஎஸ்சி அவர்களால் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பொன்விழா ஆண்டின் நினைவாக அலியார் மேடையில் இன்று கம்பீரமாக கட்டிமுடிக்கப்பட்டு காட்சிதரும் நுழைவாயில்.

ஓவ்வொரு நோன்பு பெருநாளன்றும் ஊர் ஜமாஅத்தார்கள் எவரும் ஊரைவிட்டு போவதில்லை காரணம் சங்கத்துப் பிள்ளைகளின் விளையாட்டு போட்டியை காண்பதும் இரவு நடைபெறும் வினாடி வினா போட்டியை இரசிப்பதும் பரிசளிப்பு விழாவில் பங்கு பெறுவதும் ஊராரின் வழக்கம்.

இன்னும் வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் பல நாடுகளில் வசித்து வருகிறார்கள்.





1 comment:

அ.மு.அன்வர் சதாத் said...

model snagam.very nice bur is our new effort?

Followers