KILIYANUR ONLINE

Wednesday 8 December 2010

வாட்டும் வெயிலில் வேலைவாங்குவது ‘ஹராம்’


சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடும் வெப்பம் மிகுத்த இந்த அரபு நாடுகளில் கோடை காலங்களில் உச்சி வெயிலில் தொழிலாளர்களை வேலை வாங்குவது குறித்தும் இதனால் பல தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது குறித்தும் பல்வேறு தரப்பிலிருந்து சவூதி அரசின் மனித உரிமை ஆணையத்திற்கு பல குற்றச்சாட்டுகள் வந்தன.

இது ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் சவூதி அரேபியாவின் தலைமை நீதியியல் சபையின் உறுப்பினர் டாக்டர் அலி பின் அப்பாஸ் அல் ஹாக்கிமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “கோடை காலங்களில் வெயிலின் உச்சக்கட்ட நிலையில் தொழிலாளர்களை வேலை வாங்குவது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது.

சமுதாயத்தின் கடைநிலை மக்கள் உள்ளிட்ட அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒரு தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையை அவர் ஒருவரால் செய்ய இயலாத நிலையில் அவரை வாட்டி வதைக்காமல் வேறு ஒருவரை அவரோடு அனுப்ப வேண்டும். இது கோடை காலத்திற்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா காலத்திற்கும் பொருந்தும். தொழிலாளர்கள் மீது வேலைப் பளுவை திணிக்காமல் அவர்களுடைய வேலை நேரத்துக்குப் பிறகும் அதிகமாகப் பயன்படுத்தினால் அதற்கான கூலியை கொடுத்து நீதியோடு நடந்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களை எப்படி வேலை வாங்க வேண்டும்; அவர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது. பெருமானார் அவர்கள் தன்னோடு இருந்தவர்களை எந்தக் காலத்திலும் கடிந்து பேசியதே கிடையாது. அனஸ் பின் மாலிக் (ரலி) என்கிற நபித் தோழர் அவர்கள் ஏறக்குறைய 20 வருடங்கள் பெருமானார் அவர்களோடே இருந்தார்கள். எந்தச் சூழலிலும் ஒருமுறை கூட பெருமானார் அவர்கள் என்னிடம் கடிந்து பேசியதே கிடையாது என்று அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களிடம் கனிவோடு நடக்க வேண்டும் என்று அறிவிக்கின்ற நபிமொழிகள் ஏராளம் உள்ளன.

தொழிலாளர்களின் உரிமையை இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளது. அவர்களுக்கான ஓய்வு நேரம், விடுமுறை காலங்கள், மருத்துவ விடுமுறை என்று அனைத்தும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

எங்காவது வேலைசெய்ய ஏற்ற சூழல் இல்லாத நிலையில் கடும் வெப்பம் நிலவும் நேரத்தில் தொழிலாளர்கள் வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்டால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்தை அணுகலாம். அப்படி வேலை வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அதற்கான அபராத தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க நீதிபதி உத்தரவிடுவார். உச்சக்கட்ட வெப்பத்தின் காரணமாக தொழிலாளி மரணம் அடைந்தால் அது கொலை குற்றமாக கருதப்படும். அந்த தொழிலாளியின் குடும்பங்கள் நிர்ணயிக்கின்ற தொகையை அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று டாக்டர் அலிபின் அப்பாஸ் அல் ஹாக்கிமி கூறியுள்ளார். அடுத்த ஆண்டிலிருந்து இது தொழிலாளர் சட்டமாக சவூதி அரேபியாவில் அறிமுகமாக உள்ளது.

பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்காணக்கான தொழிலாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் மிகுந்த ஆனந்தம் அடைந்துள்ளனர். இத்தகைய சட்ட விதிகளை கடுமையாக்கி தொழிலாளிகளின் சுயமரியாதையை உயர்த்தி வைத்துள்ள இஸ்லாமிய சட்ட நெறிகள் மீதும் வாழ்க்கை முறையின் மீதும் ஒரு ஈர்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

“முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தாலே போதும், யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.”

No comments:

Followers