KILIYANUR ONLINE

Wednesday 22 December 2010

மனம் மகிழுங்கள் -2

உற்சாகத் தொடர் - 11

“அவன் என்ன செய்வான்? எல்லாம் பழக்க தோஷம்!”

இந்த டயலாக் உங்களுக்குப் பழக்கமா? அனைவரும் அறிந்த விஷயம் இது. உள்ளார்ந்து இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மேலோட்டமாகத் தெரியும், பிறருடைய பழக்கம் நம்மையும் பற்றிக்கொள்ளக் கூடியது. மனிதன் பிறரால் எளிதில் பாதிப்படையக்கூடிய வகையிலேயே மன வடிவமைக்கப்பட்டுள்ளான்.

சில மாதங்கள் மேல்நாடு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்த உங்கள் நண்பரின் ஆங்கில வாடை மாறியிருப்பதைத் தாங்கள் கண்டிருக்கக்கூடும். மலேஷியா சென்று வந்தவர்களுக்கு “லா“ சேர்ந்திருக்கும். வளைகுடா வாசிகளுக்கு “கல்லிவல்லி“ ஒட்டியிருக்கும். விரும்பியோ விரும்பாலோ இவை நிகழ்ந்திருக்கக் கூடும். வெள்ளந்தி மனதுடன் மழலையாகப் பேசிக் கொண்டிருக்கும் நமது குழந்தை பள்ளிக்கூடம் சென்று வர ஆரம்பித்ததும், “பா பா ப்ளேக் ஷீப்”புடன் சேர்த்து ஒவ்வாத சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இவையெல்லாமே பழக்க தோஷங்கள் தாம்.

நமது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப நமது உடல் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதைப்போல் மனதும் உடனே பழக்கப்படுத்திக் கொள்கிறது. நம் குடும்பம், நட்பு, உறவு, அலுவலக சகா, ரேடியோ, டிவி, செய்தித்தாள், புத்தகம், சினிமா, நடிகர்கள், இப்படி நாம் வாழ்க்கையில் தினந்தோறும் எதிர்கொள்ள நேரிடும் அனைத்தும் நமது மனதைத் தாக்கவல்லன. அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள எந்தத் தடுப்பூசியும் கிடையாது. நமது எண்ணங்கள், செயல்கள், உணர்ச்சிகள், லட்சியம் என அனைத்தும் நாம் வாழும் சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

“வெய்ட் எ மினிட்! நான் அப்படியெல்லாம் இல்லை. நூறு சதவிகிதம் நான் நானேதான்,” என்று யாராவது சொன்னால் அவர் அனேகமாய் மியூஸியத்திலிருந்து வந்தவராய் இருக்க வேண்டும்.

உடலும் மனதும் சூழ்நிலைக்கேற்பத் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் என்பது இயற்கையின் விதி.

அரசாங்க அலுவலகத்தில் உத்தியோகம் பார்ப்பவர்களின் அலுவல் வேகம் பிரசித்தம். அது, டாக்டர், பயந்தாங்கொள்ளி அரசன் இவையெல்லாம் வார இதழ்களுக்கு நகைச்சுவை எழுதுபவர்களுக்காகவே உலகத்தில் உருவாக்கப்பட்டவை.

தனபால் படித்துக் கொண்டிருக்கும் நாளிலிருந்தே சற்று வித்தியாசமாய், நேர்மையாய்ச் சிந்திக்க முற்பட்டவன். நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தகப்பனார் அந்தக் காலத்து டிஸிப்ளின் பேர்வழி. அவரைப் பொருத்தவரை அரசாங்க உத்தியோகத்தில் கறார் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

தனபாலுக்கு நாட்டுப்பற்றும் அதிகம். “அதென்ன நமது அரசாங்கம், நமது நிர்வாகம், நமது அரசாங்க உத்தியோகம் என்றால் இளக்காரம், கேவலம்?” என்ற எண்ணம் அவனுக்குள் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. அரசாங்க வேலைதான் வேண்டும் என்று சேர்பவர்கள் கூட ஏதோ உழைத்து மக்கள் நலனாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் ஒரு ஜாப் செக்யூரிட்டிக்காகவே அதை நாடியும் சைடில் தனி பிஸினஸ் என்று உழைப்பைக் கொட்டுவதும் கொழிப்பதும் அவனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. ஒரு முடிவெடுத்தான். வங்கியும் பொருளாதார நிறுவனங்களும் “வா வா“ என்று அழைக்கும் அத்தனைக் கல்வியும் தகுதியும் இருந்தும் வேலைமெனக்கெட்டு அரசாங்க உத்தியோகம்தான் வேண்டும் என்று சேர்ந்தான்.

டீ அருந்தப் பத்து நிமிடம் போதுமானதாயிருக்க, அதற்காகவே அலுவலக சகாக்கள் அரை மணிநேரம் செலவிடுவது அதிர்ச்சியையும் எரிச்சலையும் அவனுக்குத் தந்தது. “ம்ஹும்! இது தப்பு” ... மிகச் சரியாக பத்து நிமிடம் மட்டுமே தனபாலுக்கு ப்ரேக். எல்லாம் சுயக்கட்டுப்பாடு. ஒரு மாதமாகியிருக்கும். பத்து நிமிடம் பதினைந்தானது. ஒரே வருடத்தில் தனபாலுக்குப் ப்ரமோஷன் ஆகியிருந்தது. வேலையில் இல்லை. டீ ப்ரேக்தான் அரைமணி நேரம் ஆகிவிட்டது! பத்து வருடத்தில் தனபால் டிபிக்கல் அரசாங்க அலுவலனாக ஆகிவிட்டிருந்தான். உதாரணம் மிகையாகத் தோன்றுகிறதோ?

இந்த அரசியல் சாக்கடையைப் பினாயில், க்ளோரின் பவுடர் போட்டுச் சுத்தப்படுத்துவதே வேலை என்று தனிக்கட்சி ஆரம்பித்து, அத்தனை கட்சியும் கச்சடா, எனவே தனித்துப் போட்டி, தனித்து அரசாங்கம் என்று ஆரம்பத்தில் வேகவேகமாக அரசியல் அரங்கினுள் நுழைபவரைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஆரம்பக் கலகலப்பில் மக்களும் கவரப்பட்டு ஏதோ நல்லது நடக்கத்தான் போகிறது போலிருக்கிறது என்று சற்று சுவாரசியப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்திருப்பார்கள். சில வருடங்களே ஆகியிருக்கும். அந்தக் கட்சி, கூட்டணிக்கும் பதவிப் பங்கீட்டிற்கும் தெற்கே, வடக்கே, கிழக்கே, மேற்கே என்று ஆலாய்ப் பறக்க ஆரம்பித்திருக்கும். “காலத்தின் கட்டாயம்“, “நிரந்தர நண்பனும் இலலை, பகைவனும் இல்லை“ என்று ரெடிமேட் வாசகங்களுடன் அக்கட்சி தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகிவிட, மக்கள் மீண்டும் சானலைத் மாற்றி “எந்த நடிகையின் இடுப்பு மடிப்பு அழகாயிருக்கிறது” என்று தங்களது பணியில் மும்முரமாகியிருப்பார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், நமக்குள் அத்தகைய மாறுதல்கள், மாற்றங்கள் நிகழ்வது நமது உள்மனதிற்கே தெரியாது. எல்லாம் தானாய் -- இயல்பாய் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எழில்மிகு சென்னையின் மாசுற்ற சூழலையும் துர்நாற்றத்தையும் அசௌகரியத்தையும் நாம் உணர வேண்டுமென்றால் பசுமையான ஒரு கிராமத்திற்கு நாலைந்து நாள் ட்ரிப் சென்றுவிட்டு வரவேண்டும். அதன் பிறகு நமக்குப் புரியும். ஏனெனில் நாற்றத்திலேயே இருக்கும்போது நாசி நாற்றத்திற்குப் பழகியிருக்கும்.

அதனால் உளவியலாளர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் தெரியுமா?

குற்றம் குறை சொல்பவர்களுடன் உங்கள் சங்காத்தம் இருந்தால் நீங்களும் தொட்டதற்கெல்லாம் குற்றம் குறை சொல்லப்பழகிவிடுவீர்கள். மகிழ்ச்சிகரமான மக்களுடன் பழகினால் உங்களையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். குழப்பவாதி, குளறுபடியாளர்களுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையும் குழப்பம்தான். ஆர்வம் நிறைந்த உற்சாக மனிதர்கள் உங்கள் தோஸ்த் என்றால் நீங்களும் உற்சாக மனிதர். ரேஸ் கார் ஓட்டுவது, வீர சாகச வேலைகள் புரிவது என்று சிலருக்கு ஆர்வமிருக்கும். அவர்களுடன் நீங்கள் இணைந்தால் உங்களுக்கும் அந்த ஆர்வம் தோன்றிவிடும். எதையும் விவாதித்துக் கொண்டே இருப்பவர்களுடன் உறவாட நேரிடடால், விவாதம் புரிவதே உங்களுடைய இயல்பாகவும் மாறிவிட்டிருக்கும். அதைப் போலவே வெற்றியாளர்களுடன் இணைந்தால் அவர்களது பழக்க வழக்கங்கள், வெற்றிப்பாதை உங்களுக்கும் சொந்தமாகிவிடும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் யாராக மாறவிரும்புகிறோமோ அத்தகையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?

தேடித்தான் பெறவேண்டும். கோழி பிரியாணி வேண்டுமென்றால் சரவண பவனில் சென்றா ஆர்டர் தர முடியும்? தலைப்பாக்கட்டுக் கடையைத்தான் தேடவேண்டும்.

ஒருவர் வாழ்க்கையில் நொடித்துப் போனவராக, மன அழுத்தத்தில் உள்ளவராக, உற்சாகமற்றவராக இருந்தால், வெகுநிச்சயமாக அவர் பழகும் நட்பு வட்டாரம் அத்தகையவர்களாகவே இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏனெனில் ஒருவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே அத்தகைய நிலையிலிருந்தால் அது தற்செயல் அல்லவாம். ஆகவே அவர் வாழ்க்கையில் உருப்படுவதற்கு வழிவகை காணவேண்டும் எனில் முதலில் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதைவிட்டு விலகி வரவேண்டும்.

அடுத்து நற்குண மக்கள், பண்பாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவம் இருந்தால் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். ”பூவுடன் சேர்ந்து நாரும் மணப்பதைப் போல” மனம் மாறும், மகிழ்வுறும். வாழ்க்கையும் தானாய் மாறும்.

அதேநேரம் எச்சரிக்கையும் அவசியம். கெட்ட சமாச்சாரம் எப்பொழுதுமே கவர்ச்சியானது. பண்பாளன் ஒருவன் தட்டுக்கெட்டுப் போய், “கெட்டப் புள்ளை“களுடன் சேர்ந்து கொண்டால், நாருடன் சேர்ந்து பூவும் நாற வேண்டியதுதான்.

உற்சாகத் தொடர் - 12

மனிதர்களுக்குப் பொதுவே செல்வ வளமும் உடல் ஆரோக்கியமும் மன மகிழ்வைத் தரும் முக்கிய அம்சங்கள். அதிலும் பணம்? அது ரொம்ப ரொம்ப முக்கியம்!

வாழ்க்கையே அதைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில்தான் நகர்கிறது. எனில், செல்வச் செழிப்பு மட்டும்தான் மன மகிழ்வா என்றால், "இல்லை" என்பதே பதில்! ஆனால் பணம், மன மகிழ்விற்கான ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“நான் பணத்தின் பின்னால் ஓடுவது இல்லை ஸார்”என்று யாராவது சொல்லலாம்.

உங்களுடைய ஒன்பதேகால் மாதக் குழந்தையின் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக, நன்கொடை அளிக்க ஆயிரக்கணக்கில் பணம் எடுத்துக்கொண்டு, பதட்டத்துடன் வியர்க்க விறுவிறுக்க இன்டர்வியூ அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். அந்தப் பிரின்ஸிபல் உங்களைப் பார்த்து, “ஸார் குலுக்கல் முறையில் உங்கள் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். நயாபைசா டொனேஷன் இல்லாமல் உங்கள் வாரிசுக்கு அட்மிஷன்,” என்று சொன்னால் உங்கள் மனம் என்ன செய்யும்? துள்ளிக் குதித்து மகிழ்வுறாது?

குழந்தைக்கு அட்மிஷன் கிடைத்தது ஒருபுறம் என்றால் மொய்யழத் தயாராய் இருந்த பணம் மீந்த திருப்தி மனதிற்கு உற்சாகமளிக்காது? பணத்தின் பின்னால் நீங்கள் ஓடாமல் இருந்தாலும் பணம் உங்கள் பின்னால் ஓடிவந்தால் மனதிற்கு மகிழ்ச்சி தானே? நேரடியாய் இல்லாவிட்டாலும் மறைமுகமாய்ப் பணம் உங்கள் மன மகிழ்விற்கு முக்கியப்பங்கு ஆற்றுகிறது. அதனால் மனதை பாடாய்ப்படுத்தும் இந்தச் செல்வம் சார்ந்த தகவல்களைச் சற்று இங்கு பார்த்துவிடுவோம்.

கவனமாய் மனதில் கொள்ளுங்கள், முப்பது நாளில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்பது போல் முப்பது நாளில் பணம் சம்பாதிக்க வழி சொல்லும் எண்ணம் எதுவும் இந்தத் தொடருக்கு இல்லை. எனவே அது சம்பந்தமான கேள்விகளை தயவுசெய்து இந்நேரத்திற்கு அனுப்ப வேண்டாம்.

முந்தைய அத்தியாயங்களில் நாம் தெரிந்து கொண்டபடி ஒருவருக்கு ஆக்கபூர்வ சிந்தனை இருக்கிறது; கடின உழைப்பு இருக்கிறது; ஆரோக்கியமான சுயபிம்பம் இருக்கிறது. “அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்ய? மாதக் கடைசியில் மளிகைக் கடைக்காரருக்குக் கடன் சொல்ல வேண்டியிருக்கிறது. என் சுயபிம்பத்தை எழுதிக் கொடுத்தாலும் சரி, வரைந்து கொடுத்தாலும் சரி, அதெல்லாம் பணத்திற்குப் பதிலாய் வாங்கிக்கொள்ள மாட்டாராம். வரும் பணமோ கைக்கும் பத்தலே, வாய்க்கும் பத்தலே!“

இப்படி யாராவது குறைபட்டுக் கொண்டால் அவர் தம்மிடம் இருக்கிறது என்று நினைக்கும் மேற்சொன்ன தகுதிகளில் குறையிருக்கிறது; அவரது மனம் மாற்றத்திற்கு தயாரில்லை என்று அர்த்தமாகிறது.

நாடு, ஏழ்மை, பொருளாதாரம், உலகமயமாக்கல், பண வீக்கம், வாந்தி, பேதி, மயக்கம் என்பதையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு இயல்பு வாழ்க்கையின் பொருளாதாரம் ஒரு மனிதனுக்கு எப்படி மகிழ்வளிக்க முடியாமல் போகிறது; அதில் அவரது மனதின் பங்கு என்ன என்பதை மட்டும் இங்கு சற்றுத் தெரிந்து கொள்வோம்.

மனதும் அதன் நம்பிக்கையும் தான் ஒரு மனிதனின் வாழ் நிலைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். “அப்படியானால் இறை சக்தி?“ என்று ஆன்மீகவாதிகள் கேள்வி கேட்கலாம். ஒன்றும் குழப்பமில்லை. இறைசக்தி செயலுக்கு ஏற்ற எதிர்விளைவை அண்டங்களை உருவாக்கும்போதே நிர்ணயித்துவிட்டது. நாம் நமது மனதை எந்தச் செயலுக்குத் தயார்படுத்துகிறோமோ அதற்கேற்பவே நாம் செயல்படுகிறோம். அதற்கேற்பவே எதிர்விளைவுகள் உண்டாகின்றன. “நான் நாலு காசு பார்த்துவிடுவேன், பணக்காரனாவேன்“ என்று நீங்கள் வலுவாய் நினைத்தால் அப்படியே உருவாகும். “என் தலைவிதி, நான் ஏழையாத்தான் இருந்து மடியனும்“ என்று நினைத்தால் ஏழ்மை என்றும் உங்களது தோழனே!

கைக்கும் வாய்க்கும் போதாமல் வாழ்பவர்களின் மனோநிலையை உளவியலாளர்கள் வர்ணிக்கிறார்கள்.

கோபால் லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையும் சகோதரரும் ஒரு சாதாரண உத்தியோகம் பார்த்துச் சம்பாதித்துக் கொண்டுவரும் பணத்தில் குடும்பம் தள்ளாடி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்து வரும் கோபாலுக்கு “நாம் லோயர் மிடில் க்ளாஸ்காரன்" என்ற பிம்பம் அவர் மனதில் உருவாகிறது. எனவே அவர் ஒட்டி உறவாடுவது, அத்தகைய பொருளாதாரச் சூழ்நிலையில் அமைந்த மக்களுடனேயே. அவர்களும் தங்களது சோகக் கதை, அவல நிலை இதையெல்லாம் பேசிப்பேசி, இவரும் கேட்டுக் கேட்டு, மனம் அவருடைய அந்தப் பிம்பத்தைப் பத்திரப்படுத்திக் கொள்கிறது. ஒருநாள் அவர் வேலைக்குச் செல்லத் தயாராகும் தருணத்தில் அவர் தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பது எல்லாம் குறைந்த ஊதியம் அளிக்கும் ஒரு சாதாரண வேலைக்காக மட்டுமே இருக்கும். “நாமெல்லாம் அதற்குதான் லாயக்கு” என்ற மனோபாவம் இயற்கையாய் அவர் மனதில் படர்ந்திருக்கும். அவரது மனது அவரை ஓர் எல்லையை மீறிச் சிந்திக்க இயலாமல் தடுத்துச் சோர்வடைய வைத்துவிடுகிறது.

மனதை எப்படித் தயார் செய்கிறோமோ அதுதானே வாழ்க்கை? எனக்கு எப்பவுமே பணம் பற்றாக்குறை என்று கோபாலின் மனது தயாராகிவிட்டதால் அதுதான் அவரது வாழ்க்கை. அவரது மூளையின் ஒரு மூலையில் ஒரு சின்ன கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் போல் ஒன்று அமர்ந்துகொண்டு, “உனக்குப் பணமே சேராது. நீ வறியவன். இதுதான் உன் தலைவிதி“ என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

விளைவு? தப்பித்தவறி ஏதேனும் உபரியாகப் பணம், போனஸ் வடிவத்திலோ அல்லது கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்போதோ, “அதெப்படி? நமக்குத்தான் பண ராசி கிடையாதே,” என்று அவரது மனது அவரை ஏகத்துக்கு அதட்டி அந்த உபரிப் பணத்தை வெற்றாய்ச் செலவழிக்க வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று தெரியாது. பர்ஸ் காலி. மனதை ஆற்றாமை தாக்கும்.

இத்தகைய மனோபாவம், மனதினுள் நிகழும் சுய உரையாடல் ஆகியவை எல்லாமாய்ச் சேர்ந்து பணப் பிரச்சனையே அவரது வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனை என்றாக்கிவிடும்.

தம்மைச் சுய ஆய்வு செய்து கொள்ளும் கோபால், மனதிடம், “நான் ஒழுங்காய்ப் படித்திருந்தால் நல்ல வேலைக்குச் சென்று கைநிறையச் சம்பாதித்து இந்தத் தரித்திரத்திலிருந்து மீண்டிருப்பேன். செல்வச் செழிப்பு எனக்கும் வாய்த்திருக்கும்.”எனப் புலம்பலாம்.

அது தப்பு. ஏன்? படிப்பு மட்டும் தகுதியெனில், ஊரில் உலகத்தில் ஏழை வாத்தியார் என்று எவரும் இருக்கக்கூடாதே? அத்தனை பேரும் கோடீஸ்வரர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அதேபோல் அத்தனை படிக்காதவர்களும் ஏழை ஓட்டாண்டியாகவல்லவா இருக்க வேண்டும்? ஆனால், கையெழுத்தைச் சரியாக இடத் தெரியாதவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கவில்லை? நடைமுறையில் எல்லா ஊரிலும் படிக்காத செல்வந்தர்களும் உண்டு! படித்த ஏழைகளும் உண்டு! எனவே அது தப்பு.

எனில்,

“என் உத்தியோகம் சரியில்லை. அதனால்தான் இப்படி,” என்று வேறு ஓர் எண்ணம் அவருக்கு ஓடலாம். சரியான உத்தியோகம் இல்லை என்பதெல்லாம் சால்ஜாப்பு. குடும்பநிலை காரணமாய் ஆரம்பத்தில் கிடைத்த ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்தாலும் அதை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பாய் மட்டுமே ஆக்கிக்கொண்டு, கழுதையைப் பிடித்தோ, காலைப் பிடித்தோ வேலை மாறி, ஊர் மாறி, நாடு மாறி, தங்களது இலக்கை அடைய நினைப்பவர்கள் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே அதுவும் தப்பு.

”நேரம் போதலை. அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் தான். என்ன செய்ய? நேரம் போதலை” என்று கோபால் நினைக்கலாம்.

நேரமாகப்பட்டது எல்லோருக்கும் பொது. கருப்பையிலிருந்து வெளியே வந்து விழுந்தவுடனேயே பிறப்புச் சான்றிதழுடன் ஒவ்வொவருக்கும் ஒருநாளைக்கு 24 மணி நேரம் என்ற இயற்கையின் உத்தரவாதத்தை அளித்து டிஸ்சார்ஜ் செய்துவிடுகிறார்கள். அம்பானிக்கும் 24, குடியரசுத் தலைவருக்கும் 24, கூலிவேலை செய்பவருக்கும் 24. எனவே நேரம் போதலை என்பதும் தப்பு.

”பணவசதி பெருக வேண்டும். ஆசைதான். ஆனால் அதற்காக என்னால் ராப்பகலாய்க் கடினமாய் உழைக்க முடியாது. என் உடம்பில் அதற்கு வலுவில்லை” என்று கோபால் நினைத்தால் அதுவும் தப்பு. ராப்பகலாய்க் கடினமாய் உழைத்து ஏழையாகவே இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்! அதேபோல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அலுவல் புரிந்து கைநிறையப் பணம் ஈட்டும் மக்களும் இருக்கின்றனர்.

ஒரு பரோட்டாக் கடையில் நாளொன்றுக்கு 500 பரோட்டா இடுபவர், கடினமாய் உழைத்து 750 பரோட்டா இட ஆரம்பித்தால், மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏதும் நிகழ்ந்து அடுத்த மாதம் அவர் காரில் வேலைக்கு வரப்போவதில்லை. கடின உழைப்பு என்பது முன்னேற்றத்திற்கான ஓர் அம்சம்தானே தவிர அதுவே முன்னேற்றம் இல்லை.

“ஒருவேளை நான் மிகவும் வயதில் சின்னவன். அதனால் அப்படி” அல்லது,

“என் பெண்டாட்டிப் பிள்ளைகளுக்குச் செலவழிக்கவே சரியாக இருக்கு,” அல்லது,

“எனக்குன்னு கல்யாணமாகி அழகாகவும் சமர்த்தாகவும் பொண்டாட்டி அமைஞ்சிருந்தா இதையெல்லாம் சரியாகப் பார்த்துக்கொள்வாள்.”

இப்படி சூழ்நிலைக்கேற்ப மனது ஏதாவது ஒரு சப்பைக் காரணத்தைக் கூறலாம்.

ஆனால் உண்மை யாதெனில், நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் மனது மாற வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சரியான திட்டமிட்ட மாற்றம் உங்களிடம் நிகழவேண்டும். பணம் வாழ்க்கையின் இன்றியமையாத வஸ்துவாகி, மன மகிழ்விற்குத் தொடர்புடையதாய் இருப்பதால், நமக்கு நாமே மனதில் உருவாக்கிக்கொள்ளும் தடைகளை நீக்கிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

இவை ஒருபுறம் இருக்க, பணம் மட்டுமே மன மகிழ்வன்று. ஏகப்பட்ட பணம், செல்வம், வசதி என்று அனைத்தும் இருந்தும் மன உளைச்சலுடன் வாழ்பவர்கள் பலர்; அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாய் உள்ள நிலையிலும் மகிழ்வுடன் வாழ்பவர்களும் பலர்.

ஒரு தொழில் அதிபருக்கு அவரது பிஸினஸில் முக்கியப் பிரச்சனை. அவசரமான மீட்டிங்கிற்காகத் தலைநகருக்குச் சென்றிருந்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க ஏற்பாடாகி இருந்தது. பிரச்சனையின் மன உளைச்சலாலும் மறுநாள் நடக்கவிருந்த மீட்டிங்கின் சிந்தனையாலும் பலவித குழப்பத்தில் இரவு தூக்கம் வராமல் தம் அறையில் உலாவிக்கொண்டிருந்தவர் சன்னலருகே வந்து நகரை நோட்டமிட கீழே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணில்பட்டது. அங்கே ஓர் ஆட்டோ ஓட்டுநர் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் நல்ல கனவு போலிருக்கிறது. அவரது முகமெல்லாம் புன்னகை. பர்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது தொழில் அதிபருக்கு.

மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது அந்த ஸ்டாண்டில் அதே டிரைவர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை அணுகித் தமது சந்தேகத்தைக் கேட்டார்.

“அதெப்படி, சாலை இரைச்சல், கொசுத் தொல்லை, பண வசதி குறைவான தொழில் என்றிருக்கும்போது ஆனந்தமாய் உன்னால் தூங்க முடிகிறது? கனவில் என்ன நடிகையா? தூங்கும் முகத்தில் சிரிப்பையும் பார்த்தேன்.”

”ஓ அதுவா ஸார்? இந்த மாதிரிப் பெரிய ஹோட்டலில் என் வசதிக்குத் தங்க முடியுமா? கனவில் நான் இந்த ஹோட்டலில் தங்கியிருப்பது போலவும் அதோ போகிறானே அந்தச் சிப்பந்தி எனக்குப் பணிவிடை செய்வது போலவும் அடிக்கடி கனவு வரும். மத்தபடி தினமும் சம்பாதிக்கிற பணத்துல சந்தோஷமா இருக்கேன் ஸார்.”

எல்லாம் மனதில் இருக்கிறது.

உற்சாகத் தொடர் - 13

நாம் சிறுவர்களாக இருந்தபோது நேரம் அதிகம் இருந்ததைப் போலவும், இப்பொழுது காலம் சுருங்கி நேரமே போதாமல் இருப்பது போலவும் உணர்கிறோமல்லவா?

“இப்போதான் வருஷம் பிறந்த மாதிரி இருக்கு; அதுக்குள்ளே எட்டு மாசம் ஆயிடுச்சா?”

“நாளு எவ்வளவு கிடுகிடுன்னு ஓடுது.”

இப்படி விதவிதமான வசனங்கள் ஒவ்வொருவரும் கேட்டிருக்கக்கூடும், உரைத்திருக்கக்கூடும். பத்தாண்டுகளுக்குமுன் ஒருநாளைக்கு இருபத்திநாலு மணி நேரமாக இருந்தது இன்று பத்தொன்பதரை மணிநேரமாகச் சுருங்கிவிட்டதா என்ன? கிடையாது!

பிறகு? நேரம் என்பது என்ன?

அடிப்படையில் நேரம் என்பதன் சாரம் மனதில் இருக்கிறது. “பரபரப்பான வாழ்க்கை முறையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நமக்கு அறிமுகமாகிக் கொண்டேயிருக்கும் அறிவியல் உபகரணங்களும் நமது நேரக்களவாணிகளே என்று அடித்துப் பேசக்கூடிய தனிக்கட்டுரை சமாச்சாரம்” - அதைப் பின்னர் பார்ப்போம். ஆனால் அங்கும் மனதுதான் அடிப்படை.

கடந்துபோன நிமிடம் சரிதம். அடுத்த நிமிடம் என்பது கேள்விக்குறி. இந்த நொடி மட்டுமே சாசுவதம். இதை முதலில் நமது மனம் உணர்ந்து கொண்டால் மற்றதெல்லாம் புகைபடிந்த கண்ணாடியைத் துடைத்ததைப்போல் தெளிவாகிவிடும்.

“அப்போ சரித்திரம் வேஸ்ட்டா? புண்ணியமாப் போகும் யாராவது எஜுகேஷன் போர்டுக்குச் சொல்லி அந்த சப்ஜெக்டை பாடத்திட்டத்தில் இருந்து தூக்கச் சொல்லுங்கள். படிப்பதற்குள் மண்டை காயுது,” என்று மாணவர்கள் குதிக்கவும் வேண்டாம்; “எதிர்காலத்திற்குத் திட்டம் வகுப்பது, அதற்கென சேமிப்பது. இதெல்லாம் என்ன கேணைத்தனமா?” என்று பெரியவர்கள் கோபப்படவும் வேண்டாம். அதெல்லாம் தப்பே கிடையாது. சொல்லப்போனால் முக்கியம்; மிக முக்கியம்.

நம் மனது சாந்தியுடன் திகழ்வதும் நமது தினசரி செயல்பாடுகள் திறனுற அமைவதும் நமது நிகழ்கால நொடியை நாம் எப்படி உணர்ந்து அனுபவிக்கிறோம் என்பதைப் பொருத்து இருக்கிறது.

இறைபக்தி உண்டு, இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்றாலும் இறைவனுக்குரிய நிகழ்காலச் செயல்பாடுகளை உணர்ந்து அனுபவித்துச் செய்யாவிட்டால் அது வெறும் சம்பிரதாயம். மனதிற்குள் சாந்தி தோன்றாது. கவலை நீங்காது.

நிகழ்கால நொடியை நோக்கி நாம் நமது சிந்தையைச் சரியாகச் செலுத்தத் துவங்கிவிட்டால் மன மகிழ்விற்கான சூட்சமம் புரிந்துவிடும். தன்னிறைவிற்கான காரணம் தெரிந்துவிடும். விரிவாய்ப் பார்ப்போம்.

இந்த நொடி எனும் “இப்பொழுது” இருக்கிறதே அது மனதிற்குச் செய்யவல்ல நன்மை-தீமைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

குழந்தைகள் விளையாடும்போதோ, ஏதாவது ஒரு காரியத்தில் மூழ்கியிருக்கும்போதோ கவனித்திருக்கிறீர்களா? அந்த நொடியை அவர்கள் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். டிவி பார்ப்பதாக இருந்தாலும் சரி, மணலில் வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, நமக்குக் கப்பல் போல் தெரியும் படத்தைக் காண்பித்து, “அப்பா இந்த பஸ்ஸைப் பாரேன்,” என்று வண்ணம் பூச ஆரம்பித்தாலும் சரி, கடமையே கண்ணாயினார் என்றுதான் இருப்பார்கள். வேறு எதுவும் அவர்கள் சிந்தையில் இருக்காது. உங்கள் அவசரம் அவர்களுக்கு முக்கியமில்லை. குழந்தைகளை நீங்கள் எவ்வளவு உரக்கக் கூப்பிட்டாலும் அவர்கள் இஷ்டப்பட நேரத்திற்குத்தான் பதில் வரும்.

அந்தத் தூய தருணத்தை வளர்ந்த மனிதர்களாகிய நாம் கவனமாய்த் தொலைத்து விடுகிறோம். அதற்குப் பகரமாய் ஒரே நேரத்தில் பல விஷயங்களை மனதினுள் போட்டுக் குழப்பிச் சிந்திக்கும் கலையை வளர்த்துக் கொள்கிறோம். பழைய பிரச்சனைகளும், நாளையக் கவலைகளும் நிகழ்கால நொடியில் நமக்குள் புகுந்துகொண்டு கூட்டம் நிரம்பிய பஸ் ஃபுட்போர்டு பயணிகளுடன் திணறுவதைப்போல் மனம் திணறுகிறது. விளைவு? மகிழ்ச்சி “பை.. பை..“. அதன் தொடர்ச்சியாய் எந்தவொரு செயலையும் சரியாகச் செய்துமுடிக்க இயலாத பயனற்ற நிலைக்குச் செல்கிறோம்.

அது மட்டுமா? வேறு கூத்தும் உண்டு.

'நாளை ஒருநாள் எல்லாம் சீரடையும்; திரையில் கடைசியில் போடும் சுபம்போல் ஒரு தருணம் வரும்; அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்' எனும் மாயக் கற்பனையில் நமது இன்பம், மகிழ்ச்சி என்பதையெல்லாம் “நாளைக்கு“ என்று ஒத்திவைத்துவிடுகிறோம். “இப்பொழுது” கவலை, ஆயாசம், சோர்வு இப்படியாகத்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

பள்ளியில் படிக்கும் மாணவனுடைய எண்ண ஓட்டம் - “இந்த ஸ்கூலில் இருந்து வெளியே வந்தால் போதும். தினமும் ஹோம்வொர்க், வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், ஃபைனல் எக்ஸாம், என்று எல்லாத்துக்கும் சேர்த்து விடுதலை. வாழக்கையே இன்ப மயம்!” என்று அமைகிறது.

அப்படி லேசில் நடந்துவிடுமா?

ஸ்கூல் முடிந்தால் காலேஜ் கவலை
காலேஜ் முடிந்தால் வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை
வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்கவில்லையே என்ற கவலை
பஸ் முடியல மோட்டார் பைக் வாங்கினால் தேவலாம் என்று கவலை
அப்படி வாங்கியானதும், கார் வாங்கினால்தான் சரிப்படும் என்ற கவலை
அதற்கு முன்னரோ பின்னரோ ... கல்யாணம் முடிக்க வேண்டும் என்ற கவலை...

கல்யாணமான பிறகு வேறு பல புதுக்கவலைகள். தனக்காகக் கவலைப்பட்டது போதாதென்று இப்பொழுது வாழ்க்கையில் உடன் வந்து இணைந்த துணையாள் பொருட்டுக் கவலை. புதுநகை அவள் கண்ணில் படக்கூடாது, புது டிஸைன் புடவைகள் அவள் கவனத்திற்கு வரக்கூடாது என்று ஏகப்பட்ட கவலை. பிறகு அடுத்து குழந்தைகள், அவர்களது படிப்பு, நலன், எதிர்காலம் என்று மனிதன் மரணிக்கும்வரை கவலைக்கு ஓய்விருக்கிறதா என்ன?

இந்த அனைத்திலும் என்னதான் நடக்கிறது? நாம் நமது நிகழ்கால நொடிகளைத் தொலைத்து விடுகிறோம். ஒவ்வொரு நொடியையும் நேற்று அல்லது நாளையத் தருணத்தில் வாழ்ந்து கொணடிருக்கிறோம். இதிலெல்லாம் மனித குலம் வெகு ஒற்றுமை. இனம், மதம், மொழி, எல்லாம் தாண்டி அனைவருக்கும் இது பொது.

மன மகிழ்வு என்பது நிகழ்காலம் சார்ந்ததாகும். அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஓர் உல்லாசப் பயணம் மேற்கொண்டால் ஊர்போய்ச் சேர்ந்த பிறகு லாட்ஜில் ரூம் போட்டு உட்கார்ந்தா யோசித்துப் பார்த்து மகிழ்வது? பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு காட்சியையும் கண்டு உணர்ந்து மகிழ்வதுதானே முறை?

அதைப்போல் வாழ்க்கையில் யாரெல்லாம் நமக்கு மிகமிக முக்கியமோ அவர்களுடன் நாம் நமது மகிழ்ச்சிகரமானப் பொழுதைக் கழிப்பதையும் ஒத்திப் போடுகிறோம். ஒருமுறை அமெரிக்காவில் நடத்திய ஆய்வொன்றில் சராசரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகப்பன், தன் இளங்குழந்தைகளுடன் நாளொன்றுக்குச் சராசரியாக முப்பத்தேழு நொடிகளே ஆரோக்கியமாய், மகிழ்ச்சியாய் நேரத்தைச் செலவிட ஒதுக்குகிறான் என்று கணக்கிட்டார்கள். இருபத்திநாலு மணி நேரத்தில் வெறும் முப்பத்தேழு நொடி.

இப்பொழுது அமெரிக்கா என்றில்லை, உலகம் முழுக்க அப்படித்தான் ஆகிவிட்டது. முப்பத்தேழு என்பது சற்றுக் கூடலாம் குறையலாம், அவ்வளவே! எல்லோருக்கும் காலில் சக்கரம்!

தகப்பனுக்குத் தன் குடும்பம், பிள்ளைகள் அவர்களின் சிறப்பான எதிர்காலம் ஆகியவற்றிற்காக உழைக்கும் நிர்ப்பந்தம் இருப்பது உண்மை. ஆனால் அது மேலெழுந்துபோய் அது சார்ந்த கவலைகள் அவனை மூழ்கடித்து யாருக்காக உழைக்கிறானோ அவர்களுடன் அவன் நிகழ்கால “இப்பொழுதை”த் தொலைத்து விடுகிறான்.

“வீட்டைக் கட்டி முடிப்போம்”, “இந்த ப்ராஜெக்ட் படுத்தி எடுக்கிறது, அது மட்டும் முடியட்டும்”, “சேமிக்கும் பணம் இந்த அளவைத் தொடட்டும்” - இப்படியே ஒவ்வொருவருக்கும் முடிவுறாத பட்டியல் உண்டு. அதெல்லாம் முடிந்தபிறகு பெண்டாட்டி பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தால், நாளை என்பதற்கு வாழ்க்கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லையே! நிதர்சனம் கைவசம் உள்ள “இப்பொழுது” மட்டுமே!

நிகழ்காலத்தில் மனம் மகிழ வாழ்வதென்பது என்ன?

வீட்டைச் செப்பனிடுவதோ, ஓவியம் வரைவதோ, மாட்டைக் குளிப்பாட்டுவதோ ஏதோ ஒன்று செய்து கொண்டிருக்கிறீர்கள். அதைச் செய்துமுடித்து, இறுதியில் அதன் பயனைக் கண்டு மகிழ வேண்டும் என்று காத்திருக்காமல் வேலை நடந்துகொண்டிருக்கும் போதே, முகத்தை வருடும் காற்று, பறவைகளின் சங்கீதக் குரல், அகர்வால் பாஸந்தி என்று உங்களைக் கேட்காமலேயே உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தீண்டி, பின்னர் தாண்டிப் போகிறவற்றில் தென்படும் சுவாரஸ்யங்களை உள்வாங்கி மனதில் இட்டு நிரப்பிக்கொள்வது. அவ்வளவுதான்.

நிகழ்கால “இப்பொழுதில்” வாழ்வதென்பது தற்போதைய தருணங்களைப் பற்றிய உணர்ச்சியை உணர்ந்து இனிமையாக்கிக் கொள்வது. நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்கால இனிய தருணங்களுக்குக் குறைவேயில்லை. ஆனால் அதைப் பயன்படுத்திக்கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது. ஏனெனில் அதை யாரும் மற்றவருக்குத் திணிக்க முடியாது.

“சாப்பிட்டுப் பார் காஜு பர்பி” என்று இனிப்புப் பலகாரத்தை வேண்டுமானால் மற்றவருக்கு ஊட்டலாம்.

“ஆஹா, அந்தச் செவ்வானத்தைப் பார், சிலிர்க்கலே?,” என்று உடனிருப்பவரைக் கேட்டால் அவர் உணர்ந்தால்தான் ஆச்சு. ஆனால் அவர் காலையில் மனைவி பூரிக்குக் கொடுத்த உருளைக்கிழங்கு மசாலாவில் உப்பு குறைந்திருந்த காரணத்திற்காக ஏற்பட்ட லடாயையே நினைத்துக்கொண்டிருந்தால்?

நிகழ்காலத் தருணங்களை உணர்ந்து வாழ்வதால் நன்மை இருக்கிறது என்கிறார்கள். என்னவாம்? மனதிலிருந்து பயம் போய் விடுமாம். தெனாலி அளவிற்கு இல்லையென்றாலும் சராசரி மனிதருக்கு அடிப்படையான ஒரு பயம் உண்டு. அது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது விளைவைப் பற்றியதாக இருக்கும். அந்தக் கவலை முற்றிமுற்றி நம்மை எந்தவொன்றையும் ஆக்கபூர்வமாய்ச் செயல்படவிடாமல் தடுத்துவிடுகிறதாம்.

அதற்காக பயந்துவிடாதீர்கள்!

அத்தகையத் தீவிர பயமோ கவலையோ அது நீங்கள் வெறுமே முடங்கிக் கிடக்கும் வரை மட்டுமே! ஏதாவது ஒன்று செய்து பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்து நீங்கள் எழும் நொடியிலேயே உங்களது பயம் தணிந்துவிடும். முயன்று பார்க்க ஆரம்பித்ததுமே ஏதாவது ஒரு வழி தென்பட்டுவிடும்.

மனம் பயத்தை ஒத்திவைத்துவிட்டு மகிழும்!

எனவே நிகழ்காலத் தருணத்தில், எதிர்கால விளைவைப் பற்றிய பயத்தை மனதில் சுமந்து தொய்ந்துவிடாமல், ஆக வேண்டிய காரியத்தை யோசித்து, உணர்ந்து, செம்மையாய்ச் செயல்பட வேண்டும்.

அதேநேரம் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

ஒன்று, இதெல்லாம் நல்ல காரியத்திற்கு.

அடுத்தது, வாழ்க்கையில் உண்மையான சோகங்களும் உண்டு. குடும்பத்தில் ஏதோ துர்சம்பவம். வேலை போய்விட்டது, திருடு போய்விட்டது இத்தியாதி. அவற்றையெல்லாம் வெறும் நிகழ்காலத் தருணத்தை நேசிக்கிறேன் பேர்வழி என்று சன் டிவியில் ”காமெடி டைம் பார்த்து மாற்றிவிட முடியாது. அவையெல்லாம் சீர்செய்யப்பட வேண்டிய நிகழ்வுகள். அதற்கு அந்தச் சோகத்திலேயே மூழ்கி வெறுத்து செயலற்று இருப்பதைவிட எழுந்து சோகம் களையும் முயற்சி ஏதாவது செய்ய வேண்டும். அல்லது அந்த நிகழ்வையொட்டிய காரியங்களுக்கு நடைபெற வேண்டிய விஷயங்களைச் செயல்படுத்த வேண்டும். மனம் இலேசாகும். காயங்கள் நாளாவட்டத்தில் மறையும். ஏனெனில் இறைவன் நமக்கு அளித்த அற்புத சக்தியொன்று உண்டு - மறதி. அது உதவும்.

அறியவேண்டியது யாதெனில், வருமுன் காவாதான் வாழ்க்கை எனும் பிரயத்தனத்தில் நிகழ்காலத்தைத் தொலைக்க வேண்டாம் என்பதே பாடம்.

மார்க் ட்வெய்ன் (Mark Twain) என்று ஓர் அமெரிக்கர். எழுத்தாளர், நகைச்சுவையாளர். அவர் ஒருமுறை குறிப்பிட்டார், ”நான் வாழ்க்கையில் பயங்கரமான விளைவுகள் பலவற்றைக் கடந்திருக்கிறேன். அவற்றுள் சில உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன.”

புரிந்திருக்குமே?

உற்சாகத் தொடர் - 14

பழைய கவலைகளும் எதிர்காலம் பற்றிய பயமும் சேர்ந்து எப்படி நம்முடைய நிகழ்காலத்தைத் தொலைக்க வைக்கின்றன, அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு எப்படி நிகழ்காலத் தருணத்தில் வாழ்வது, அங்ஙனம் வாழ்வது மனதிற்கு அளிக்கும் ஆரோக்கியம் என்ன ஆகியனவற்றைச் சென்ற வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாய், மற்றொன்றை இங்கே பார்ப்போம்.

காத்திருத்தல்!

காத்திருத்தல் தெரியுமோ? பஸ், ரயில், விமானம், காதலன், காதலி, குழாயில் தண்ணீர், மின்சாரம் என்று - விரும்புகிறோமோ இல்லையோ - நாம் வாழ்க்கையில் எதற்காவது காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் காத்திருக்கும் போது, என்னவோ காலங்காலமாய்க் காத்திருப்பது போன்று ஓர் உணர்வும் ஆயாசமும் எரிச்சலும் ஏற்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா?


பஸ்ஸிற்காகக் காத்திருந்தால் அந்த பஸ் வரவே வராது போலிருக்கும். மருத்துவர் அறையில் காத்திருந்தால் நம்மைத் தவிர நமக்குப் பிறகு வந்தவர்களையெல்லாம் அந்த நர்ஸ் முதலில் அழைப்பது போலிருக்கும்.

சரி பஸ்தான் லேட்டாகிறதே; அந்த எதிர்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று சென்றிருப்பீர்கள்; சரியாக அப்பொழுதுதான் பஸ் வந்து சேரும். குடித்தும் குடிக்காமலும் அரக்கப் பரக்க ஓடிவர வேண்டியதுதான். அடக்கி வைத்த உச்சாவைக் கொட்டிவிடலாம் என்று பாத்ரூம் சென்றிருக்கும்போது அந்த நர்ஸ் உங்கள் பெயரை அழைத்திருப்பார்.

தவிர,

ஒரு குறிப்பிட்ட கடிதம் (இப்பொழு எல்லாமே மின்னஞ்சலோ), ஒரு மனிதர், பொருத்தமான உத்தியோகம், அனைத்தும் பொருந்திப்போகும் வாழ்க்கைத் துணை, திரையில் காணும் அயல்நாட்டு நகரங்களைப் போன்ற அழகிய இந்திய நகரங்கள் என்று காத்திருப்புப் பட்டியல் நீளம். இவையெல்லாம் வந்தடைய நீண்ட காலமாகலாம், அல்லது சில வராமலேயே போகலாம்.

ஆனால் இவற்றிற்காக அல்லது இவற்றில் ஏதோ ஒன்றிற்காக நாம் காத்திருக்கும்போது. அந்தத் தாமதத்தினால் மனம் பாதிப்படைகிறது. அதன் எதிர்வினை, எரிச்சல், கோபம் என்று வெளிப்பட்டு மேலும் இழுத்துப் போட்டுக் கொள்ளும் அவஸ்தை. எனவே, காத்திருப்பு தவிர்க்க இயலாதது எனும்போது ஏன் மனதை வருத்திக் கொள்ள வேண்டும்? ”உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா” என்று இருக்கும் மகிழ்ச்சியையும் ஏன் தொலைக்க வேண்டும்?

சரி - அதற்கு என்ன செய்வது?

காத்திருக்கும நேரத்தில் வாழுங்கள்.

அப்படியென்றால்?

காத்திருக்கும்போது ஸ்தம்பித்து நின்றுவிடாமல் மற்ற உபயோகமான வேலைகளைச் செய்ய வேண்டுமாம். நிகழ்காலத் தருணத்தைத் தொலைக்காமல் ஆக்கபூர்வ வேலையொன்றில் ஈடுபடும்போது மனதை அது அவஸ்தையிலிருந்து திசை திருப்ப உதவிடும் என்கிறார்கள்.

மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு ஒரு விஷயத்திற்குக் காத்திருக்காமல் நடைபெறவேண்டிய அடுத்த வேலைகளை இயல்பாய்த் தொடருவது உத்தமம். வாசிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் சுவாரஸ்யப் புத்தகத்தைக் கையுடன் எடுத்துச் சென்றிருந்தால் மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பியுங்கள் போதும். நேரம் சுருங்கிப்போய் நீங்கள் உடனே உள்ளே அழைக்கப்பட்டிருப்பீர்கள். (இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா பொது இடங்களிலும் டிவி பெட்டியை கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். அதை கவனமாய்த் தவிர்ப்பது நல்லது. பாதி மன மகிழ்வு தானாய் வந்தடையும்.)

பொருத்தமான வேலை கதவைத் தட்டி வந்தால்தான் ஆச்சு என்று அடம்பிடித்துக் கொண்டு வீட்டில் சோபாவில் குந்திக் கொண்டிருக்காமல், அத்தகைய வேலைக்கு முயன்று கொண்டே வேறு உத்தியோகம் பார்க்கலாம். இல்லை அப்பா சம்பாதித்து வைத்தது ஏகத்துக்கும் இருக்கிறது, உட்கார்ந்து சாப்பிட்டால் கரையாது என்ற பொருளாதாரத் தன்னிறைவு இருந்தால், ஏதாவது பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை அழைத்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கண்டுபிடிக்கச சொல்லி அதை மெருகூட்டி வெளிப்படுத்துங்கள். நல்லதொரு சிற்பி, தொழிலதிபர், என்று யாராவது வெளிப்படுவர்.

காத்திருக்கும் ஒரு செயலிலிருந்து உங்களது அடிமைத்தளையை நீக்கிக் கொண்டு வேறு அலுவலில் ஈடுபட்டால் நிகழ்காலத் தருணம் எளிதாகி மனம் சாந்தியடையும். பஸ் தானாய் வந்து சேரும்.

அப்படியெனில் மனைவியை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்கக் கூடாது. எஸ்எம்எஸ்-ஸில் உங்கள் மனைவியிடம் கேளுங்கள்.

உற்சாகத் தொடர் - 15

கவலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதை அத்தியாயம் 13-இல் படித்தோமில்லையா? அதில் திருமணமானதும் நகை புடவை பற்றிய கவலைகள் கணவனுக்குப் புதிதாய் ஏற்படுவது பற்றிப் படித்துவிட்டு மதுரையைச் சேர்ந்த மு. ரஃபீக் என்பவர் இப்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் - ”எப்படி சார் பக்கத்தில இருந்து பாத்த மாதிரியே எழுதுறீங்க? நானும் ஃப்ரெண்டும் பேசிக்கிட்டது அங்கு வரை கேட்டுருச்சா?”

எனக்குக் கொஞ்சமாய் டெலிபதி தெரியும் என்று ஜல்லி அடிக்கலாமா என்று யோசித்தேன்.

அதெல்லாம் பெண் தோன்றி பொன் தோன்றிய காலத்திலேயே புவியில் தோன்றிவிட்ட விதி ரஃபீக்.

என்ன விதியோ அல்ல சதியோ நிகழ்காலத்தில் மகிழ்வுடன் வாழ முக்கியமான மற்றொரு சமாச்சாரம் உண்டு.

மன்னிப்பு!

“இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”

“செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.”

“நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.”

பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல்,

“எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன்.”

இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்கு வசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து - சுமந்து திரிகிறோம்.

இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.

தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவை தன்னால் மன்னிக்க முடியாதென்றால் அது தன்னுடைய பிரச்சனையல்ல, அது தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவின் பிரச்சனை எனும்படியான எண்ணம் சிலருக்கு உண்டு. உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் - மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்ல, உங்களுடைய பிரச்சனை!

“என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? அவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்? முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமா? நாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் “சோற்றைத் தின்றோமா, டிவியில் ஸீரியலைப் பார்த்தோமா” என்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, மனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும்.

உங்கள் அத்தையின் மைத்துனர் மாடியில் புதிதாய் அறையொன்று கட்டி, அதற்காக ஒரு புதுமனை புகுவிழா நடத்தி, உங்களைக் கூப்பிட மறந்துவிட்டார். ”எத்தகைய அவமதிப்பு? மனுஷரா அவர்? அவரை மன்னிக்கவே முடியாது,” என்று நீங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பாதிப்பு யாருக்கு? அவருக்குத் தூக்கம் தொலையப் போகிறதா, வயிற்றைப் புரட்டப் போகிறதா, வாயில் கசப்புணர்வு ஏற்படப் போகிறதா? ம்ஹும். அவையனைத்தும் உங்களுக்குத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

உங்களுக்கு நீங்கள் முக்கியம், உங்கள் ஆரோக்கியம் முக்கியம், உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால், அவரை மன்னிக்க வேண்டும். ஏன்? அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும்.

பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி, உங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமா?

நீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.

பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்? மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு ஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது - பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்..

இதைப் படித்துவிட்டு, “என் உறவிலேயும் மன்னிக்க முடியாத சில சமாச்சாரம் நடந்து விட்டது. இங்கு எழுதியுள்ளது புரிவதைப்போல் தெரிகிறது. சரி ஸார். போகட்டும் மன்னித்து விடுகிறேன், ஆனால் ஒனறு, நடந்ததை என்னால் மறப்பது என்பது மட்டும் முடியாது,” என்று காஞ்சிபுரத்திலருந்து சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பலாம்.

சுரேஷ் என்ன சொல்கிறாரென்றால், “நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன் ; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.”

மன்னிக்கவும் சுரேஷ். உண்மையாய் மன்னிப்பதென்பது நம் அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே! “மன்னிப்போம், மறப்போம்.” அவர்களுக்கு எப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதை மறப்பதுமாகும். அதுவே மேன்மை.

யாரிடம் தவறில்லை? நாமெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கற்றது, பெற்றது என்றதன் அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவு சிலாக்கியமாய் வாழ முயன்று கொண்டிருக்கிறோம். அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்; தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம், சில சமயம் முட்டாள்த்தனமான காரியங்கள் செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் அவையனைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை. நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம். கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?

பிறந்த குழந்தை கண்ணைத் திறந்த நொடியிலேயே, “இதோ பூமிக்கு வந்துவிட்டேன். நான் முடிந்தளவு எனது வாழ்க்கையைச் சொதப்பிக் கொள்ளப் போகிறேன்” என்று தீர்மானம செய்து கொண்டு பிறப்பதுமில்லை; வளர்வதுமில்லை. அந்தந்தத் தருணங்களில் நமக்குள்ள மன முதிர்ச்சியினாலேயே வாழ்வில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கும்.

ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் கற்றுக் கொண்டது, வீட்டில் பெரியவர்கள் சொன்னது, மருத்துவர்கள் உபதேசித்தது என்ற தகவல்களின் அடிப்படையில் தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். நாம் வளர்ந்த பிறகு நமக்குப் பிடித்தவகையில் நம்மைப் பெற்றவர்கள் வளர்க்கவில்லை என்று கோபித்துக் கொள்ள முடியுமா? அதற்காகப் பெற்றவர்களை மன்னிக்கவே முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு, “உங்கள் வளர்ப்பு சரியில்லை என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் பார்,” என்று தறுதலையாக, கிரிமினலாக வாழ்ந்தால் என்னாவது?

புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வதென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம்.

மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும்.

அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியை, அக்கிரமத்தை, அட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்? என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி, அக்கிரமம், அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டி/யிருக்கும்/ய விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.

சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி. இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ்.

மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்துவிட்டாலே போதும், மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம்.

இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது.

நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?

நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை சிறிதாகவும் இருக்கலாம்; பெரிதாகவும் இருக்கலாம்.

· சிலர் தின்று கொழுத்து உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.
· சிலர் திண்ணாமல் உடல் வருத்தி மெலிவார்கள்.
· சிலருக்கு மொடாக் குடி.
· சிலர் திட்டமிட்டுத் தங்களது உறவைத் துண்டித்துக் கொள்வார்கள்
· சிலருக்கு வறுமையில் கிடந்து மடிவோம் என்று சங்கல்பம்
· சிலருக்கு ஆரோக்கியத்தை அழித்துக் கொள்வது என்று ஆனந்தம்

இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருக்கும். “நான் படு கேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ லாயக்கற்றவன்.”

உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு “தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லை” என்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.

நீங்கள் உங்களையே குற்றம் சொல்லி, மன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்? மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற்காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.

முதலில் நீங்கள் உங்களை மன்னித்து, நல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்து உங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவு எளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். ஸார் இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை.

மனைவி, கணவன், மாமனார், மாமியார், எதிர்வீட்டுக்காரர், பால்காரர், வானிலை அறிக்கை வாசிப்பவர் என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் அது பிரச்சனையை எவ்விதத்திலும் தீர்க்க உதவாது. வராத மழைக்காகக் குடை எடுத்துக் கொண்டு செல்ல நேர்ந்திருந்தாலும் பிறருடைய நக்கல் சிரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு வானிலை அதிகாரியை மன்னித்து விடுங்கள்.

உற்சாகத் தொடர் - 16

கூடுவாஞ்சேரியில் சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி, "உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.

--------------------------------------------------------------------------------

என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்?

அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?" இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.

சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.

இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் ”போனால் போகட்டும் போடா” என்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.

"எல்லாம் எல்லை மீறிப் போச்சு! இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை!" என்று நினைத்தால் நாம் அவ்விஷயத்தில் நமது கட்டுப்பாட்டை இழக்கிறோம். அந்தக் கட்டுப்பாட்டிழப்பு நமது முடிவு!

"நான் அம்பேல்!" என்று கையைத் தூக்கிவிடுவதால் ஏற்படுவது.

போராட்டம் இல்லையெனில் அது என்ன வாழ்க்கை?

மன மகிழ்வுடன் இருப்பதென்பது, எப்பொழுதுமே எளிதான ஒன்றில்லை. வாழ்க்கைப் பாதையில் காணும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதன் கடுமையும் மாறுபடும். நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் அது! சில சமயங்களில் நம்முடைய மனவுறுதி, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியனவற்றையெல்லாம் படையாகத் திரட்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் உருவாவதுதான் நம் மனப் பக்குவம்.

மனப் பக்குவம் என்பதென்ன?

அதுவே தனி சப்ஜெக்ட் ஆக விரியும்.. இந்த இடத்தில் நமக்குத் தேவையான மனப் பக்குவத்தை மட்டும் பக்குவமாய்ப் பார்த்துவிடுவோம்.

இங்கு மனப் பக்குவம் என்பதன் பொருள் நமது மன மகிழ்விற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வது ஆகும்.

நம்முடைய சுற்றமும் நட்பும் சூழ்நிலையும் கூட நம் மன மகிழ்வைச் சிதைக்கக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரின் மனதும் யாருடையது? அவரவருடையது!

அதன் மகிழ்வு யாருடையது? அவரவருடையது!

எனில், அதன் பொறுப்பு யாருடையது? அதுவும் அவரவருடையதே!

அப்படியானால் அவரவரும் தங்களிடம் இருப்பதில் தானே கவனம் செலுத்த வேண்டும்? அந்த மனப் பக்குவம் வர வேண்டும் என்கிறார்கள்.

மேலும் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம்.

நமது மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் யாருடையவை?

நம்முடையவை! இன்று இதையெல்லாம் நீ நினைக்க வேண்டும் என்று யாரும் நமது மூளைக்குள், கணினியில் ஃபீட் செய்வதுபோல் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகவில்லையே! நம் மனதில் ஓடும் எண்ணங்களையெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம்.

எனவே நமது மகிழ்ச்சிக்கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம்.

ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை!

அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார்.

போச்சு! எல்லாம் போச்சு!

அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை!

ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்றுவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?

நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?

"இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும்.

ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம்.

என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப்படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக்கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும்.

"கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!"

வாழ்வின் நிறமே மாறிவிடும்!

மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா?

வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும்.

கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.

நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம்.

உற்சாகத் தொடர் - 17

மனதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்? அவர் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை அமையவில்லை; அவர் எண்ணப்படி பல விஷயங்கள் நடைபெறவில்லை என்று அர்த்தம். அவரது மகிழ்வின்மைக்குக் காரணம் தேடினால் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும்.. எனவே அவர் என்ன செய்கிறார்? தம் மனதில் மகிழ்விற்கு "நோ வேகென்ஸி" போர்டு மாட்டிவிட்டு வருத்தம், சோகம், அயர்வு இப்படி பலவற்றையும் வாடகையே இல்லாமல் குடியமர்த்திக் கொள்கிறார்.


சரி! எதிர்பார்ப்பு என்பது என்ன? அது வயது, பால், வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் ஒன்றாகும்.

குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஓர் எளிய வட்டத்திற்குள் நிற்கும் பீட்ஸா, ஐஸ்க்ரீம், வீடியோ கேம்ஸ் இப்படி ஏதாவது ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறைவேறவில்லை என்றால், அடம், அழுகை, பிடிவாதம் இத்தியாதி. ..... எதிர்பார்த்தது கிடைத்துவிட்டால் பார்க்கவேண்டுமே அவர்கள் மகிழ்ச்சியை.

இதையெல்லாம் பார்க்கும் ஒரு பெண் "இதென்ன சிறுபிள்ளைத்தனம்?" என்பார். ஆனால் அவர் எதிர்பார்த்த டிஸைனில் புடவை, நகை கிடைக்கவில்லை அல்லது அதற்குக் கணவர் ஓக்கே சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி தொலைந்து முகம், "உம்".

கணவர்கள் எதிர்பார்ப்பு வேறு ரகம். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நாலு கால் ஆசனம், பணம், பினாமி பெயர்களில் சொத்து என விரியும்.. இப்படி எதிர்பார்ப்பு என்பது எண்ணற்ற வகையில் ஆளுக்கேற்ப மாறுபடும்; அது நிறைவேறாத போது அதற்கேற்ப ஏமாற்றமும் மாறுபடுகிறது; அதற்கேற்ப மன மகிழ்வும் தொலைகிறது.

இவையனைத்தும் உணர்த்தும் உண்மை - நினைத்ததெல்லாம் நிறைவேறிய முழு மனிதரென்று எவருமே உலகில் இல்லவே இல்லை என்பதையே!.

"எனவே கனவான்களே, நான் எப்பொழுது மகிழ்வடைவேன் என்றால்..."என்று ஒரு கால நிர்ணயம் செய்து கொள்வது அபத்தம். உலக வாழ்க்கை முழு நிறைவற்றது என்றானபின், சில சமயம் உற்சாகம், சில சமயம் ஏமாற்றம், சில சமயம் வெற்றி, சில சமயம் தோல்வி என்பது இயற்கை விதி.

"இன்பம் பாதி, துன்பம் பாதி, இரண்டும் சேர்ந்த கலவை நான்" என்பதுதான் வாழ்க்கை.

வாழ்க்கை என்பது நாடக மேடையாக இருக்கலாம். நாமெல்லாம் நடிகர்களாக இருக்கலாம். அதற்காக, நாடகம்போல் அனைத்துக் காட்சிகளும் முடிந்து இறுதியில் சுபம் என்று திரை இழுத்து மூடும்போது கைதட்டி மகிழலாம் என்று காத்திருந்தால், நமது வாழ்க்கை நாடகம் முடிந்திருக்கும். ஏனெனில் அது ஒரே ஒரு காட்சி மட்டுமே. மறுநாள் அடுத்தக் காட்சி கிடையாது.

பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொள்வதுபோல் மகிழ்ச்சி வந்ததும் மகிழ்ந்து கொள்ளலாம் என்பது வாழ்க்கையில் நடக்காது.

மகிழ்ச்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை நாம் நடந்து போய் அடைவதற்கு.

கவலைகளெல்லாம் முடிந்து, "அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்" என்றும் மகிழ்வடைய முடியாது.

மகிழ்வு என்பது ஒரு தீர்மானம். அந்தத் தீர்மானத்தை நாம் உளமாற எடுக்க வேண்டும். முடிந்தது விஷயம். சிக்கலெல்லாம் அந்தத் தீர்மானத்தை எடுப்பதில்தான்.

நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நகரும் ஒவ்வொரு வினாடியும் சந்தேகமேயின்றி உணர்த்தும் ஒரு விஷயம் நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது என்பதைத்தான். பிறந்த நொடியிலிருந்து நமது நெஞ்சில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது "கவுண்ட் டௌன்" (count down) கடிகாரம். அதிலுள்ள ஒரே சௌகரியம், கவுண்ட் டௌன் எண்ணிக்கை நமக்குத் தெரியாது என்பது மட்டுமே. ஆயினும் இதில் நாம் உணர வேண்டியது இப்புவியில் நமது அவகாசம் குறைவு என்பதையே!. புவியின் வரலாற்றையும் இன்னமும் சுற்ற அதற்குள்ள வாய்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது வாழ்க்கை அவகாசம் ஒரு புள்ளி மட்டுமே.

இதைச் சரியானபடி கருத்தில் கொண்டால் போதும். நிகழ்காலத் தருணத்தை, நொடியை உபயோகமாய், மகிழ்வாய் மாற்ற முடியும். இதற்குக் குதர்க்கமாய் அர்த்தம் புரிந்து கொண்டு, "இவ்வளவு தானே அவகாசம்! ஓர் ஆட்டம் ஆடிவிடலாம்" என்று வாழ்க்கையில் கெட்டக் குத்தாட்டம் போட்டால் அடைவது மகிழ்ச்சியில்லை; அது கானல் நீர்!

உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்க, வரிந்து கட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று கவலைப்படாமல், நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போது, அவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர், தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சிந்தனையாளர் கூறினார் - "ஒரு ரகசியம் சொல்கிறேன், நீ மனம் மகிழ வேண்டுமானால், மனம் மகிழ்."

என்ன புரிகிறது?

யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி "இந்தா மகிழ்வு" என்று இலவச டிவி, வேட்டி, சேலை போல் தரப் போவதில்லை, நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை.

எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு, மகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம்.

உற்சாகத் தொடர் - 18

வெயிலும் மழையும் போல இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. மாறி மாறி வரும். சில நேரங்களில் வானிலை அறிக்கை தவறாகி விடுவிதைப் போல் இவை சற்றுத் தாமதமாக மாறலாம்; ஆனால் மாறும்! எனவே துன்பம் என்பது என்ன; அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; மகிழ்வை எப்படித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று சில விஷயங்களைக் கூறுகிறார்கள்.
நிச வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமும் இல்லை; துன்ப மயமும் இல்லை. அனைத்தும் சரியாக அமைந்து வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது, அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா இடர் வரும். பிரிவு, உயிரிழப்பு, தொழில் நட்டம்! குறைந்தபட்சம் காலில் ஆணியாவது குத்திவிடும்! அப்படி நிகழும் இடர் பேரிழப்பாயிருந்தால், "எல்லாம் போச்சு! இனி வாழ்க்கையில் என்ன இருக்கு?" என்று விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுவோம். ஆனால், அடுத்து சில நாளோ, மாதமோ, வருடமோ கழிந்தபின் அதிலிருந்து மீண்டு எழுந்து வரத்தான் செய்வோம்; வாழ்க்கை மாறத்தான் செய்யும்.

பெருந்துயர் என்று அன்று நினைத்ததைக் கடந்து வந்து இன்று திரும்பிப் பார்க்கும்போது அந்தத் துயரின் வீரியம் இன்று இருக்காது; கவனித்திருக்கிறீர்களா? சிலசமயம் அதை நினைத்து அசைபோட்டுச் சிரிப்பதும் நடக்கும்.

ஏன்? எப்படி? மனசு தான். வேறென்ன?

வாழ்க்கையின் இடைஞ்சலான தருணங்களில் மனம் முழுதாய் நிதானத்தைக் கடைபிடிப்பதில்லை. நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் பிரச்சனையை அதன் அளவைவிட அதிகமாய் உருவகித்துக் கொள்கிறது. ஆங்கிலத்தில் out of proportion என்பார்கள். எனவே அத்தகையவர்களுக்கு எதிர்காலமே கேள்விக் குறியாகி, தென்படுவதெல்லாம் பிரச்சனை, பிரச்சனை, மேலும் பிரச்சனை!

இது படு அபத்தம் என்கிறார் ஓர் உளவியலாளர்.

"என்னது, அபத்தமா? அவரவருக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்" என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் அவர் உதாரணத்துடன் விளக்குகிறார்.

அலுவலோ எதுவோ ஒரு வார காலத்திற்குப் பயணம் செல்லவேண்டியிருக்கிறது. அதற்கு ஒருவர் மூன்று பெட்டிகளில் துணிமணிகள், ஒரு பெரிய பெட்டி நிறைய சோப்பு, பேஸ்ட், பல் துலக்க ஒரு டஜன் ப்ரஷ், என்று எடுத்துக் கொண்டால் என்ன சொல்வோம்? குடும்ப சமேதராய் பயணமா என்றால் இல்லை.

"அப்படியானால் அது முட்டாள்தனம்," என்பது எளிய பதில்.

அதேதான் மனதிற்கும்! அடுத்த இருபத்தைந்து வருடத்திற்கான கவலைகளை மனதில் சுமந்து கொண்டு திரிந்தால் மனம் என்னவாகும்? அந்த மனதை நினைத்து நாம் பரிதாபப்பட வேண்டாம்? ஒருநாளைக்கு இருப்பதே இருபத்து நாலு மணிநேரம் எனும்போது, இன்றைய பொழுதிற்கும் வேண்டுமானால் கொஞ்சமாய் நாளைய பொழுதிற்கும் யோசித்தால், கவலைப்பட்டால் போதாது? அதை நாம் செய்வதில்லை.

படவேண்டிய கவலையை அளவு பிரித்துச் சிறிதாக்கிக் கொண்டால் மனம் அதற்குத் தீர்வு காண்பது எளிது. இன்று இன்றையப் பிரச்சனையைத் தீர்ப்போம், மற்றதை நாளை பார்ப்போம் என்று நினைத்தாலே பிரச்சனை பாதிக்குமேல் குறைந்துவிடும்.

அடுத்த முறை ஒரு பிரச்சனை தோன்றினால் முக்கியமாய் ஒரு கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம் - "இது தலைபோகும் பிரச்சனையா?"

எத்தனை முறை நம் அனுபவத்தில் தலைபோகும் பிரச்சனையைச் சந்தித்திருப்போம்? ஆனால் மனது மட்டும் ஒவ்வொரு முறையும் "தலையே போச்சு" என்றுதான் கன்னத்தில கைவைத்துக் கொள்கிறது!

"சுவாசிக்கத் தேவையான காற்று இருக்கிறதா?", "இன்று உண்பதற்குப் போதிய உணவு இருக்கிறதா?" என்பதற்கு நாம் "ஆம்" சொல்லிவிட்டால் அதிலேயே பிரச்சனை தீர்ந்து விடுகிறது. உலக உருண்டையில் இன்னும் சில பகுதிகள் உள்ளன. அங்கும் சில மனிதர்கள் வாழ்கிறார்கள். நாம் தினமும் உண்ணும் வகைவகையான உணவை யாராவது அவர்களுக்கு ஃபோட்டோவில் காண்பித்தால்தான் உண்டு! அத்தகைய அபாக்கியம் நமக்கு இல்லாத நிலையில் மற்றவையெல்லாம் அடுத்தக் கட்டப் பிரச்சனைகளே. அவை தீர்க்கத் தகுந்தவை, மறக்கத் தகுந்தவை, புறந்தள்ளக் கூடியவை என்ற வகையறாக்களில் அடங்கிவிடும். எனவே நாம் ஏன் மன மகிழ்வைப் புறந்தள்ளி வாழ வேண்டும்?

நம்முடைய அவசியத் தேவைகளை மீறிய சில்லறைப் பிரச்சனைகளுக்கெல்லாம் மனதை வருத்தி இன்பத்தைத் தொலைக்கக் கூடாது.

உற்சாக சீலர் ஒருவரை அவரின் நண்பர் தொலைபேசியில் அழைத்தார். "எல்லாம் முடிந்தது; என் தொழிலில் போட்ட என்னுடைய பணம் அத்தனையும் காலி. நான் இப்போ போண்டி, திவால்."

இவர் கேட்டார்: "உன்னால் பார்க்க முடிகிறதா?"

"நல்லாத் தெரியுது."

"நடக்க முடிகிறதா?"

"முடிகிறது."

"உன்னால் கேட்க முடிகிறது என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். இல்லையென்றால் எனக்கு போன் செய்திருக்க மாட்டாய்."

"ஆம்."

"பிறகென்ன? உன்னிடம் எல்லாம் பாக்கி இருக்கிறது. நீ தொலைத்தது வெறும் பணத்தை."

புரிகிறதோ? அதுதான் சூட்சுமம். எந்த நிலையிலும் தொலைந்தது என்னவென்பதைச் சரியாக அவதானித்துவிட்டால் மனம் மகிழ்வைத் தொலைக்காது.

இதையே சற்று மாற்றியும் சொல்லாம். "நமக்கு நடக்கவே கூடாது, அப்படி நடந்தால் நம் வாழ்க்கை முடிந்தது" என்று நாம் நம்பும் பிரச்சனை என்ன என்பதை ஒவ்வொருவரும் கேட்டு அதற்குரிய நியாயமான பதிலை மனதிலிருந்து பெற வேண்டும். அந்தப் பதிலுடன் அவரவருடைய பிரச்சனைகளை ஒப்பிட்டுக் கொண்டால் பிரச்சனையின் சரியான பரிமாணம் புலப்படும். யதார்த்த வாழ்க்கையில் நாள்தோறும் நாம் எதிர்கொள்வன பிரச்சனைகள் என்பதைவிட அசௌகரியங்களே! சிறியது முதல் பெரிய அளவிலான அசௌகரியங்கள். அதைத்தான் மனமானது மாய்ந்து மாய்ந்து உருப்பெருக்கி வருந்தி மகிழ்வைத் தொலைக்கிறது.

மனவியலாளர்கள் சில டிப்ஸ் அளிக்கிறார்கள். நாமும் முயன்று பார்க்கலாம். உடம்பில் அலர்ஜி, அரிப்பு எதுவும் ஏற்படாது என்பது உத்தரவாதம்!

* "என்னை நானே மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறேனோ?" என்று உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒருவாரமாய்த் தூக்கமின்றி நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை உங்களின் நண்பர் சட்டையே பண்ணாமல், மெது பக்கோடா தின்று காபி குடித்துக் கொண்டிருப்பார்.

* ஏதோ உலகில் உள்ளவர்கள் அனைவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருப்பதைப் போலவும் நம்மைப் பற்றிப் புறம் பேசவே காத்திருப்பதைப் போலவும் சிலர் நினைத்துக் கொண்டு வாழ்க்கையைப் படுசீரியஸாக ஆக்கிக் கொள்வதும் உண்டு. பக்கத்து வீட்டில் தேவையின்றி எட்டிப்பார்ப்பது, மூக்கை நுழைப்பது மனித இயல்பாக இருக்கலாம். ஆனால் அதற்காக? அவரவருக்கும் வாழ்க்கை படுபிஸியாக நகர்ந்து கொண்டிருக்க, மற்றவர்கள் குந்தவைத்து உட்கார்ந்து ஏதோ சினிமா பார்ப்பதுபோல் நம் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து வருந்தி மகிழ்வைத் தொலைத்தல் கூடாது.

* எந்தச் சிக்கலான பிரச்சனையானாலும் "இந்த நிகழ்வினால் நான் படித்த பாடம் என்ன?" என்று சுய ஆய்வு செய்து கொள்ளுதல் நல்லது. அது நமக்கு பாடம் கற்க உதவும். பக்குவம் வளரும். உற்சாக மனிதர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் அனுபவம் பெற்றுத் தங்களுடைய மகிழ்வான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் செயலிலும் நடையிலும் உற்சாகம்! முகத்தில் எப்பொழுதும் சிரிப்பு. "எப்படியும் சமாளித்துவிடலாம், ஜெயித்து விடலாம்," என்பது அவர்களது ஆழ்மன நம்பிக்கை வாசகம்.

* எந்தத் தீவிரமான பிரச்சனையானாலும் "அடுத்த ஐந்து நிமிடத்திற்கு என்னால் அமைதியாய், சாந்தமாய் இருக்க முடியுமா?" என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி அடுத்த ஐந்து நிமிடங்களைக் கடந்துவிட்டால், அடுத்த ஐந்து நிர்ணயித்துக் கொள்ளவும். இப்படி சில ஐந்துகளைக் கடந்ததுமே அந்தப் பிரச்சனை ‘ஒரு மேட்டரே இல்லை’ என்பீர்கள்.

* தொடர்ந்து ஆக்கபூர்வ வேலைகளில் மும்முரமாய் இருக்கப் பழகிக் கொள்வது மன ஆரோக்கியம் வளர்க்கும் வழியாகும். தன்னிரக்கம், அதிகமான மன உளைச்சல் இவையெல்லாம் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான சிந்தனையின் பின் விளைவுகள் என்பதால் அதற்கெல்லாம் மனதிற்கு அவகாசம் அளிக்கக் கூடாது.

* இதையும் தாண்டி மற்றொன்று இருக்கிறது. தன்னலம் கருதா உதவி. பிறருக்கு உதவக் களமிறங்கினாலே பாதிக்கும் மேலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். நீங்கள் ஒருவருக்கு உதவி புரிந்து அதனால் அவர் முகத்தில் தோன்றும் புன்னகை இருக்கிறதே, அது உங்கள் மனதில் மகிழ்வைக் கொண்டு வந்து கொட்டும்.

கிணற்றடியில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். முகத்தில் வருத்தம். அவ்வழியே வந்த தனபால் விசாரித்தார். தமது கைக்கடிகாரம் நீரில் விழுந்துவிட்டதாக அவர் தெரிவிக்க, அவருக்கு எப்படியும் உதவியே தீருவது என்று தோன்றியது தனபாலுக்கு. அடுத்த நொடி உடனே கிணற்றுக்குள் குதித்துவிட்டார். பெரியவருக்கு ஒரே ஆச்சரியம், "காலையில் நான் ஆற்றில் குளிக்கும்போது தவறவிட்ட கடிகாரத்திற்கு இவர் ஏன் இப்பொழுது கிணற்றுக்குள் குதிக்கிறார்?"

உற்சாகத் தொடர் - 19

NEWS: தொடர்ந்தும் போர் ஒத்திகை நடத்தினால் தென் கொரியாவுக்கு எதிராக போர் - வட கொரியா எச்சரிக்கை ***** இன்று அமைச்சர் அன்பழகனின் 89 வது பிறந்த நாள் - முதல்வர் நேரில் வாழ்த்து ***** தென் ஆப்ரி்க்காவில் கடத்தப்பட்ட 27 வயது இந்தியர் நிதின் பேபி விடுதலை ***** வெள்ளச்சேத நிவாரணத்துக்காக 2000 கோடி ரூபாயை பாகி்ஸ்தானுக்கு வழங்குகிறது சீனா ***** ராசாவுக்கு முன் பதவியில் இருந்தவர்களும் பரிசுத்தவான்களல்ல - ஜெயலலிதா ***** 103 வயதான லண்டன் பெண்மணி லில்லியன்லோவி பேஸ்புக் வலைத்தளத்தில் இணைந்துள்ளார் ***** எனது ஆட்சியில் சிறைச்சாலை சித்ரவதைகள் இல்லை - உமர் அப்துல்லா ***** ரஷ்ய ஜனாதிபதி மெட்வடேவ் 20.12.2010 அன்று இந்தியா வருகிறார் ***** சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக மற்றும் மதிமுக ஆதரவு ***** வங்கதேசத்தில் சுனம்காஞ்ச் மாவட்டத்தில் படகு விபத்தில் 35 பேர் பலி ***** பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் ஹோட்டலில் தீ விபத்து - 15 பேர் பலி .மனம் மகிழுங்கள்-19
வெள்ளி, 22 அக்டோபர் 2010 22:40 நூருத்தீன் Articles .இணையம், ஐஃபோன் போன்ற சங்கதிகளெல்லாம் இல்லாத ஆதி காலத்தில் வானொலி என்றொரு பொருள் இருந்தது. பல்பொடி விளம்பரம், உங்கள் விருப்பம், செய்திகள் போன்றவை தவிர சிறுவர்களுக்கென்று ஞாயிறன்று நிகழ்ச்சி ஒன்றும் இருக்கும். சிறுவர்கள் மேல் அக்கறை தொலையாமல் இருந்த காலமாதலால் நல்லதொரு சைவ நிகழ்ச்சி. அதை நடத்தும் வானொலி அண்ணா என்பவர் “சிரிச்சு கிட்டே இருங்க, சந்தோஷமா இருங்க.” என்று நிகழ்ச்சியை முடிப்பார்.

நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கொடை. அதன் பலன் அதைத் திறம்பட உபயோகிப்பதில் உள்ளது. நல்ல நகைச்சுவை என்ன செய்யும்? சிரிக்க வைக்கும். அந்தச் சிரிப்பை வாய்விட்டுச் சிரித்தால்? நோய் விட்டுப் போகும் என்கிறது முதுமொழி.

“சிரிப்பு ஒரு சிறந்த மருந்து” என்கிறார்கள் உளவியலாளர்கள். மனதாரச் சிரித்தால் மூளையில் என்டார்ஃபின் (endorphin) எனும் அமிலம் கிளம்பி, லாகிரி வஸ்துகள் அற்ற இயற்கையான உற்சாகத்தை அளிக்கிறதாம். உடம்பிலுள்ள சுவாச அமைப்பிற்கும் இலேசான உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

நார்மன் கஸின் (Norman Cousin) எனும் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். பேராசிரியரும் கூட. அவருக்கு நோயொன்று ஏற்பட்டு மிகவும் படு்த்தி எடுத்தது. இதர மருந்துகளுடன் பிரதானமாய்ச் சிரிப்பையும் ஒரு மருந்தாக அவர் உபயோகித்ததையும் அது அவருக்கு எத்தகைய நிவாரணத்தை அளிதததென்பதையும் அவர் எழுதிய Anatomy of an Illness என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

சிரிப்பு மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம். மனதையும் முகத்தையும் சிரிப்பு மலர வைக்கும். முகத்தை “உம்“ மென்று வைத்துக் கொண்டு சிரிக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். சகிக்காது!

வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் பதற்றமின்றி அணுகி, மனம் விட்டுச் சிரிக்கப் பழகினால் மனதை நாள்தோறும் மகிழ்வாய் வைத்துக் கொள்ளலாம்.

பிரச்சனை, கவலை, சோதனை இல்லாத வாழ்க்கையென்பது யாருக்கும் இல்லை. அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப வாழ்க்கையை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆனால் அதைத் தாண்டி எவ்வளவு விரைவில் இயல்பு நிலையை அடைகிறோம் என்பதில்தான் மன மகிழ்வின் சூட்சமம் அடங்கியிருக்கிறது.

புது கார். வாங்கி ஒருமாதமே இருக்கும். பல் துலக்க மறந்தாலும் கார் துடைக்க மறக்காமல் கவனித்துக் கொள்கிறீர்கள். ஒருநாள் ஆட்டோகாரர் ஒருவர் உங்கள் காரை ஸடைலாகக் “கட்“ செய்து இடித்து விட்டு, தவறு உங்களுடையது என்பதைப்போல் கைநீட்டியும் திட்டிவிட்டு போயே போய்விட, இறங்கிப் பார்த்தால் உங்கள் காரின் முன் பகுதி நசுங்கிய மூக்காய்க் காட்சியளிக்கிறது.

அதற்கு என்ன செய்யலாம்? ஒரு மாதம் சோறு தண்ணீர் இல்லாமல் கிடந்து மாயலாமோ?

இயற்கையாய்த் தோன்றும் வருத்தம், கோபம், ஆத்திரம் இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவந்து செப்பனிட வேண்டியதைச் செப்பனிட்டுவிட்டு அடுத்த ஓரிரு நாளுக்குள் வாய் விட்டுச் சிரிக்கும் அளவிற்கு நீங்கள் தேறிவிட்டால் நடந்த முடிந்த அந்த வேண்டாத செயலும் பெரும் பிரச்சனையாகத் தெரியாது. சிரித்துக் கொண்டேகூட நண்பரிடம்அந்த நிகழ்வை நீங்கள் விவரிக்க முடியும்.

ஒரு பிரச்சனையை அடுத்து இயல்பு நிலையை அடைய ஒருவருக்கு ஒருநாள் ஆகலாம். பிறி தொருவருக்கு ஒருவாரம் ஆகலாம். வித்தியாசம் என்ன? முதலாமவர் ஆறு மடங்கு குறைவாய் வருத்தப்படுகிறார்!

நாமெல்லாம் மனிதர்கள். ஆசாபாசம் நிறைந்தவர்கள். சில சமயம் காரியங்கள் தவறாய் நடைபெறத்தான் செய்யும். சில கணவன்மார்களின் மனைவிகளிடம் ஓயாத வருத்தம் உண்டு. “என்னிக்குததான் இவர் ஒரு விஷயத்தை உருப்படியாய்ச் செய்திருக்கிறார்.” அதையெல்லாம் நினைத்து மாய்ந்து மறுகாமல் திருத்திக் கொண்டு சிரித்துப் பழகினால் வருத்தத்தை ஒதுக்கிவிட்டு மன மகிழ்வை எளிதில் எட்ட முடியும்.

குழந்தைகள் சிரிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளாது? அதனால்தான் “பிறரை நோக்கிப் புன்னகைப்பதும் தர்மமே,” என்று உலகிற்கு வழி காட்டிய தலைவர்கள் கூறிச் சென்றனர். உங்கள் புன்னகைக்கு ஒருவர் பதில் புன்னகையை அளித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி இல்லையெனில் அவரிடம் நீங்கள் வாங்கிய கடன் நிலுவையில் இருக்கலாம்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பரொருவர் -- மனுஷருக்கு நல்ல ஹாஸ்ய உணர்வு -- தமக்குப் பள்ளியில் நிகழ்ந்த அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். பத்தாம் வகுப்பில் அவர் படித்துக் கொண்டிருக்கும்போது, “இனி குற்றவாளிகள் யாரும் பொய் பேச முடியாது. தலையில் ஹெல்மட் மாதிரியான கருவியைப் பொருத்தி மின்னதிர்வுகளை தலைக்குள் செலுத்தினால் குற்றவாளிகள் கடகட என்று செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உண்மையைக் கக்கிவிடுவர்” என்று அவருடைய வாத்தியார் கூறியிருக்கிறார். உடனே இவர் எழுந்து, “ஏன் சார்! குற்றவாளி ஊமையாக இருந்தால் என்ன செய்வார்கள்?” என்றிருக்கிறார். இவருடைய நண்பர்கள் உம்முனாம் மூஞ்சியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.

அதற்காக எதற்கெடுத்தாலும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பதும் நல்லதன்று. “அளவிற்கதிகமான சிரிப்பு உள்ளத்தை மந்தப்படுத்தும்.” தவிரவும் உடம்பிற்கு நல்லதோ இல்லையோ, மற்றவருக்கு நம்மேல் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். நம்மை வேறுவிதமான டாக்டரிடம் அனுப்பிவிடுவார்கள்.

அளவோடு சிரித்தால் வளமோடும் வாழலாம். மகிழ்வோடும் வாழலாம்.

உற்சாகத் தொடர் - 20

புவிக்கு ஈர்ப்பு விசை இருப்பதைப்போல் மனதிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. ஆனால் அது சற்று வித்தியாசமான ஈர்ப்பு விசை ஆகும். நீங்கள் விரும்புவது எதுவோ அதை நோக்கி உங்களை இழுக்கும்; விரும்பாதது எதுவோ அதை நோக்கியும் இழுக்கும். உங்கள் மனதை எது அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் இந்த ஈர்ப்பு விசையின் குறியிலக்கு.


“இந்தத் தவறை மட்டும் நான் மீண்டும் செய்யக் கூடாது... இன்னொரு முறை அவன் முகத்தில் நான் முழிக்க மாட்டேன்... எங்களை மதிக்காத அந்தக் கட்சியுடன் இனி என்ன புடலங்காய்க் கூட்டணி...”

நமக்கெல்லாம் இவை, இன்னபிற ஏதோ ஒரு சந்தர்பத்தில் நன்கு பரிச்சயமான உரையாடல்கள் தாம். ஆனால் சற்றுக் கவனித்துப் பாருங்கள்………. எதெல்லாம் வேண்டாம் என்றார்களோ அதெல்லாம் முறைப்படி நடந்திருக்கும்; தவறு மீண்டும் நிகழ்ந்திருக்கும்; முகத்தில் மீண்டும் முழித்து இளித்தோ முறைத்தோ கடந்திருப்பார்கள்; அந்தக் கட்சியுடன் இந்தக் கட்சி ஒன்றிப்போய் மேடையில் கரங்கள் இணைந்து உயர்ந்திருக்கும். காரணம், அலசல் அதெல்லாம் இங்கு முக்கியமில்லை. மனது - அது எப்படி ஈர்க்கப்படுகிறது?

ஐஸக் நியூட்டன் சொல்ல மறந்த விதி மன ஈர்ப்பு விசைக்கு உண்டு. “எதை மனம் நினைக்கிறதோ, மனதை எது ஆக்கிரமிக்கிறதோ அதை நோக்கி மனம் நம்மை நகர்த்தும்.”

அந்த நகர்வு ஓர் இலக்கினை நோக்கித்தான் இருக்குமே தவிர அந்த இலக்கின் எதிர்த் திசையில் பயணிக்காது. இதென்ன புதுக் குழப்பம்? விஞ்ஞானியைத் துணைக்கு அழைக்கும்போதே நினைத்தேன் என்று ஓட வேண்டாம். மிகவும் எளிதாய் இதைப் புரிந்து கொள்ளலாம்.

“நான் ஒன்று சொல்வேன். அதை நீங்கள் கற்பனை செய்யவே கூடாது. ஒரு பூம்பூம் மாடு. அதன் கழுத்தில் மணி. முதுகில் கலர்கலராய்த் துணி. அந்த மாட்டின் கண்களில் பெரியதொரு கூலிங் க்ளாஸ்,” என்று விவரித்தால் உங்கள் மனதில் ஏற்படும் பிம்பம் என்ன? சாட்சாத் அந்த வர்ணனைக்கு ஏற்ப ஒரு மாடு. ஆரம்பத்திலேயே கற்பனை செய்யக்கூடாது என்று சொன்னது? அதை மனம் புறந்தள்ளிவிடும்.

“இதை மறக்கக்கூடாது,” என்று உங்களுக்குள் சொல்லிய எத்தனை விஷயங்களை இதுவரை மறந்திருக்கிறீர்கள். நேற்றோ, கடந்த வாரமோ, அதற்குமுன் ஏதோ ஒருநாள், “இன்னிக்கு வேலைமுடித்து சீக்கிரம் வீட்டுக்கு வாங்க; மறக்கக் கூடாது,” என்று வீட்டில் சொன்னதற்குச் சிரிக்க சிரிக்கத் தலையாட்டிவிட்டு, அதை மறந்து தொலைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை?

மனமானது “மறதி“ எனும் சங்கதியை விட்டுவிலகி “மறதியில்லை” என்ற எதிர்த்திசைக்குச் செல்லாது. ஏனெனில் மனதிற்கு அப்படி ஒன்று இல்லை!

அதற்கு மாற்றாய், “நான் இதை நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்ளப்போகிறேன்,” என்று சொல்லிப் பாருங்கள், நடக்கும். “ஞாபகம் கொள்” என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு மனம் அதை நோக்கி நகரும்.

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் சில விவரங்களைப் பார்ப்போம்.

மன நகர்வைச் சரியாகப் புரிந்துகொண்டால் நம் மனதிற்கு இடவேண்டிய கட்டளைகளும் சரி, பிறருக்கு இடவேண்டிய கட்டளைகளும் சரி மிக எளிதாகிவிடும்.

சிக்கிக்கொண்ட பட்டத்தை எடுக்க மரத்தில் ஏறியிருக்கும் சிறுவனிடம், “டேய் பார்த்துடா! விழுந்துடப் போறே,” என்று சொன்னால் அவன் தவறிக் கீழே விழ நீங்கள் உபகாரம் செய்தாச்சு.

“இன்று புத்தகத்தை எடுத்துச் செல்ல மறக்கக்கூடாது,” என்று நீங்கள் நினைத்தவுடனேயே, “அப்படியா சேதி,” என்று உங்களது மனம் மறதிக்குப் பாதி தயார்.

மனமானது பிம்பங்களின் அடிப்படையில் இயங்கும் தன்மை கொண்டது. மேலே சொன்ன பூம்பூம் மாடு ஒரு நல்ல உதாரணம். அதனால் “புத்தகத்தை மறக்கக் கூடாது” என்று நினைக்கும்போதே மறதி எனும் மாயபிம்பம் உங்கள் மனதில் உருவாகிவிடுகிறது. மனது அந்த பிம்பத்தை நோக்கி ஈர்க்கப்பட, புத்தகத்தை மறந்து விடுவீர்கள்.

“இன்று புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று சொல்லிப் பாருங்கள். மனம் “ஞாபகம் கொள்“ என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும். புத்தகத்தை ஞாபகமாய் எடுத்துக் கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது.

வீட்டிற்கு விருந்தினர்கள் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளின் வால்தனம் போதாதென்று வந்த குழந்தைகளின் வால்தனமும் சேர்ந்து கொண்டு ஒரே ரகளை. உங்கள் பாட்டனார் வழிச் சொத்தாக ஒரு பழங்கால கடிகாரம் வீட்டின் நடுக் கூடத்தில். மிகுந்த அக்கறையும் கவலையுமாய், “பிள்ளைகளா! பார்த்து விளையாடுங்க, இந்தக் கடிகாரத்தை உடைச்சுடாதீங்க,” என்று சொன்னால் அந்தக் கடிகாரம் பேரீச்சம் பழத்திற்குத் தயாராகிவிடும்..

“சீக்கிரம் கிளம்பு, பஸ்ஸை மிஸ் பண்ணத்தான் போறோம்,” என்று கிளம்பினால் பேருந்தைத் தவறவிட உங்கள் மனது ரெடி.

இதற்கெல்லாம் என்ன செய்வது? என்ன வழி?

நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க வேண்டும். தீர்ந்தது பிரச்சனை!

லூட்டி அடிக்கும் உங்கள் பிள்ளைகளிடம், “கத்தாதே! சப்தம் போடாதே!” என்பதற்குப் பதிலாய், “அமைதியாய் இரு!” என்றுதான் உபதேசம் இருக்க வேண்டும்.

அக்கறைக் குறைவாய் உண்பவரிடம் “சாம்பாரைச் சட்டையில் கொட்டிக்கப் போறே” என்று சொல்லாமல் “சாம்பாரைக் கவனமாய் தட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்,” என்பதே சரியான ஆலோசனை. இவையெல்லாம் முக்கியமற்றவை போல் தோன்றலாம். ஆனால் இவை நம் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது.

பல ஆண்டுகளாய்க் கார் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தீர்கள். எங்கும் சென்று இடித்ததில்லை; கீறல் இல்லை. நீங்களும் சமர்த்து; காரும் சமர்த்து. பிறகு அதை விற்றுவிட்டுப் புதிதாய் ஒரு கார் வாங்கி, அதன் புது மெருகின் கவனத்தில் “எங்கேயும் இடித்துவிடக்கூடாது,” என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்ட ஆரம்பிக்காமல், “நான் இந்தக் காரைப் பத்திரமாக ஓட்டப் போகிறேன்,” என்று சொல்லிக் கொண்டால் போதும்.

பரபரப்பான கிரிக்கெட் மேட்ச். அசால்ட்டாய் 96 ஓட்டம் எடுத்துவிட்டார் தொடக்க ஆட்டக்காரர். அவருடைய செஞ்சுரிக்காக அரங்கத்தில் டென்ஷன். அவருக்கும் டென்ஷன். “இந்தப் பந்தில் நான் கேட்சாகிவிடக் கூடாது,” என்று நினைக்காமல், “வா போடு! ஸிக்ஸர் அடிக்கிறேன் பார்,” என்று நினைத்தால் போதும், நூறு நிச்சயம்.

இதேதான் அனைத்திற்கும்.

“நான் வாழ்க்கையில் நொடித்து விடக்கூடாது... நான் இந்த விஷயத்தைச் சொதப்பி விடக்கூடாது...” என்பதையெல்லாம் உதறி எறிந்துவிட்டு,

“நான் முன்னேறுவேன்... சாதிக்கப் பிறந்தவனப்பா நான்... வெற்றி எனது தோஸ்த்...” என்று மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மனம் சரியாய் நகரும்; மகிழும்!

தொடரும்......

No comments:

Followers