KILIYANUR ONLINE

Monday 12 March 2012

நிரந்தர இலவச மின்சாரம்!


அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.

1 comment:

கூடல் பாலா said...

தற்காலத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு பதிவு!

Followers